Monday, 30 July 2018

#கடிதம்

#தமிழனுக்கு ஒரு கடிதம்

#மிகலி

நான் சொல்கிறபடியும் கொஞ்சம் பார். களிமண் பிசைக்கிறவகளின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றிக் கவலைப்படுவது உண்டா?அவர்களை மாற்றுவதற்காக அல்லது அவர்களுடைய மனத்தில் நல்லெண்ணம் ஏற்படுவதற்காக, நீயும் நானும் ஏதாவது செய்தோமா?ஒன்றும் செய்யாமல், தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு காலம் கழிப்பது குற்றம் அல்லவா?மறந்துபோன அந்த யாழைப் பற்றிப் பழங்காலத்துப் பாணரும் விறலியரும் பொருநரும் கூத்தரும் நம்மைப் போல்தான் ஏமாந்த எண்ணம் எண்ணிக் கொண்டு, நல்லவர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். அந்த யாழின் அருமை பெருமைகளை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதை வாழவைக்கும் வல்லமைப்பற்றி அவர்கள் எண்ணத் தவறினார்கள். அதனால் தான் அந்த அருமையான கருவி அழிந்தது. அதை நினைத்துப் பார்க்கவும் இன்று ஒரு விபுலாநந்தர் தேவையாகிவிட்டது.

தம்பி!மேடையில் முழங்குவதைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்தாலாவது, இதை எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும் என்று எனக்குச் சில வேளைகளில் தோன்றுகிறது. இது பைத்தியக்கார எண்ணமாக உன்போன்ற இளைஞருக்குத் தோன்றலாம். ஆனால் அனுபவத்தால் சொல்கிறேன்; மேடை மகிழ்ச்சி நமக்குக் கடமை மறதியை உண்டாக்குகிறது. சிறந்த பேச்சு, நல்ல கைத்தட்டு இரண்டும் சேர்ந்தால் உணர்ச்சித் தணிவு, அடுத்த நிலையாகப் பழைய பிற்ப்போக்கு வாழ்வு-இவைதான் இது வரையிலும் கண்டவை. நம்மை எண்ணித்தான் திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை. நமக்காகவே சொன்னதுபோல உள்ளது அந்தக் குறள். நம்மைப்பற்றி நாமே மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியில் மயங்கியிருக்கும்போது, கடமையைப் புறக்கணித்துக் கெட்டு அழிந்தவர்களை நினைத்துக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது எவ்வளவு பொருத்தம்!மேடைப் பேச்சைக் கேட்டுக் கைத்தட்டுவோரைக் காணும் போதெல்லாம்,"இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக"என்ற அந்தக் குறள் என் நினைவுக்கு வந்துவிடுகிறது, என்னை அறியாமல்.
தம்பி!இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார் போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்கதவாறு கப்பற்றவேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. என் கருத்தில் எந்தப்பகுதி யாவது உனக்குத் தெளிவில்லாமல் இருந்தால் அதைக் குறித்து எழுது; தெளிவுபடுத்துவேன். ஏதாவது உனக்கு உடன்பாடு இல்லாமல் கருத்து வேறுபாடாக இருந்தால் எண்ணிப்பார்; அல்லது விட்டுவிடு. நான் என்ன செய்வேன்?நீ எவ்வளவு உண்மையாக உணர்கிறாயோ அவ்வளவு உண்மையாகவே நானும் உணர்கிறேன். இந்தத் தமிழகத்தில் நாம் இருவராவது ஒன்றுபட முடியாதா, பார்ப்போம்.

கவிதைகள்

அப்பா
#கழுத

அப்பா
மூளை கலங்கி நின்றால் முத்தம் கொடுப்பாய்
தேகம் சோர்ந்து இருந்தால் கட்டியனைப்பாய்
எல்லாம் சரியாயிருந்தால் கொஞ்சம் தள்ளிநிற்பாய்
கீழே விழுந்துவிட்டால் என்னையே எழவைப்பாய்
சறுக்கி விழுந்தால் சிறிய சறுக்கல் தானோ என்று கவலை கொள்வாய்
புதைகுழியில் மீளமுடியாமல் மாட்டியிருந்தாலும்,"அப்பா இருக்கேன்டா"என்பாய்
என் அழுகை;உன் வலி
காலமெல்லாம் உனக்கு வலி தருவேன்
இவள் புத்தி பெற்றால் என்ற மூட நம்பிக்கையிலா,
என்னை விட்டுப் பிரிந்தீர்
சித்தம் கலங்கி மீண்டும் மூடனாய் நிற்கிறேன்
வாருங்கள் அப்பா.........

Saturday, 28 July 2018

தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை

#கழுத

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு,மொழிவாரியான மாநிலங்கள்,அவற்றின் மாறுபட்ட கலாச்சாரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்ததே, இந்தியா.
இப்படி ஒரு தேசம் உலகில் வேறு எங்கும் இல்லை
நம் பலமே;நம் பலவீனம்
ஆம்,ஒன்றுபடுதல் நம் பலமென்றால்;தேவையானவைக்கு ஒன்றுபடாததே நம் பலவீனம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக(பணநாயக)நாடு;உலகின் மிகப்பெரிய அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டுள்ள ஒரு நாடு;உலக மக்கள்தொகையில் இரண்டாமிடம்;பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசங்களின் பட்டியலில் முதலிடம்;நீரிழிவு நோயில் முதலிடம்;சக்கரை நோயில் முதலிடம்;அப்பப்பா எத்தனை பெருமைகள்,நினைக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
100 கோடி மாளிகையில் வாழுபவனும் இந்தியாவுல தா இருக்கா; கடைக்கோடில ஒருவேளை கஞ்சிக்கு கஷ்டப்படுறவனும் இந்தியாவுல தா இருக்கா.
வயித்துக்கே வழியில்லாதப்போ வைத்தியம் பார்த்து என்ன பண்ணப்போறங்குற அவன் கேள்வி நியாயம் தான.
ஏழைகளுக்கான இலவசக் கல்வி
ஏழைகளுக்கான இலவச மருத்துவம்
இதுதா இந்தியா அரசியல் தலைவர்களோட உயிர் மூச்சு,ரத்த ஓட்டம் எல்லாமே.இதுல,எந்த இலவசமும் இதுவரைக்கும் ஏழைக்கு கிடைச்சதே இல்ல.அவனுக்கு தா பணக்காரர்களுக்கு உழைச்சு கொட்டவே நேரம் சரியாய் இருக்கே,பிரகெப்படி இலவசத்த பற்றிலா யோசிப்பா அந்த கிருக்க.கடைசில அவனுக்குன்னு இலவசமா வரத்து நோயு மரணமும் தா.நோய் வந்த அவன் துன்பப் பட்டு இறப்பதை விட, கடன்பட்டே அதிகம் இறந்து போகிறான்.
இங்கே தான் இந்தியாவோட மருத்துவச் சேவை கேள்விக்குள்ளாக்கப் படுது.
ஒரு அம்மா ,இந்தியாவுக்கு வந்து சேவை செஞ்சு நோபல் பரிசு வாங்கினாங்க.ஆனா,இப்போ மட்டும் வந்தாங்கனா,ஆள விடுங்கடா சாமினு ஓட்டமா ஓடிருப்பாங்க.அந்தளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிருக்கு.
அப்போ,மருத்துவத்துறை வளர்ந்திருக்கானா,நிச்சயமாகவே வளர்ந்திருக்கிறது.
புதிய புதிய கருவிகள்;
புதிய புதிய சிகிச்சை முறைகள்;
புதிய மருத்துவமனைகள்
எல்லாமே அதிகமாகியிருக்கு;ஆயினும்,நோய்கள் கட்டுப்படுத்தப்படல;கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
காரணம் :மைய மருத்துவச் சேவை
பரவலாக்கப்படாத மருத்துவச் சேவையே பரவி வரும் நோய்களுக்கான காரணம்.இந்தியாவின் மருத்துவத் திட்டங்கள் அனைத்தும் தவறுகளைச் சீர்செய்யக் கூடியவையே;இருந்தும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறியதன் பக்கவிளைவே இன்று இந்த நிலைமை.இந்தியர்கள் வைக்கோல் வீரர்களாகவே இருந்து வந்துள்ளோம்;செயல்வீரர்கள் ஆகியிருந்தால் உலகமே நம்மை உற்று நோக்கி நம் திட்டங்களைக் காலவாடியிருக்கக் கூடும்.
சந்தையின் அடுத்த வார நிலவரம் தொடரும்.

தலையங்கம்

தமிழகத்தின் தனித் தன்மைகள்

#மதி

தமிழின் தொன்மையை பாதுகாக்கவும்,தமிழின் பெருமையை நிலைநாட்டவும் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவுவதென தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது.சோழ தேசம் தஞ்சையில்  1981-ல்  அந்நாளின் முதலமைச்சரான புரசித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.அம்மடியம்மா , ஆயிரம் ஏக்கரா? ஆம் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றது நம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.அறிவுலகமும் ஆரச்சியுலகமும் போற்றும் வகையில் அமைந்த நம் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2013- லேயே 15,8,929 நூல்கள் இருந்துள்ளன.
சின்னத்தின் விளக்கம்
                  தமிழ் பல்கலைக்கழக சின்னம் உலக உருண்டை,பெருவுடையார் கோவில் கோபுரம்,சுவடிகள்,வீணை,மயில் இவற்றை உள்ளடக்கியதாகும்.
இவற்றின் அர்த்தம்:
           "எங்குமுள தமிழருக்கு உரியதாகும் என்பதனை உலகுருண்டை எடுத்துக்காட்டும்"
           " தங்கிவளர் இடம்தஞ்சை என்ற உண்மை தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் காட்டும்"
             "பொங்குதமிழ் முப்பிரிவைச் சுவடி வீணை பொலிவுமயில் இவை காட்டும்" .
துறைகள்:
              தங்கிலிஷ் தவள்புரண்டு ஓடும் நம் தாய் நாட்டில் தமிழில் இருபத்தி ஐந்து துறைகளா?ஆம் தூய தமிழில் தமிழின் வளம் குறையா வண்ணம் ஐந்து புலன்களும் அவற்றின் கீழ் இருபத்தி ஐந்து துறை பட்டப்படிப்புகளும் இங்குள்ளன.
     1.கலைப்புலம் 2.சுவடிப்புலம் 3.வளர்தமிழ்புலம் 4.மொழிப்புலம் 5.அறிவியல்புலம் இவற்றின் கீழ் இருபத்தி ஐந்து துறைகள் உள்ளன...
சிறப்புகள்: 

           வான்வெளிக்காட்சியில்  தஞ்சை பல்கலைக்கழகம் த, மி, ழ், நா, டு   என்ற எழுத்து வடிவ கட்டிட அமைப்பு கொண்டது.ஒவ்வொரு கட்டிடத்திலும் ஒவ்வொரு புலத்துறை கேசெயல்படுகிறது.வேறொரு கல்லூரியில் வேறொரு  பட்டப்படிப்பை பயிலும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த தமிழ் பட்டப்படிப்பை இங்கு தொலைதூர கல்வி மூலம் பயிலளாம்.

சாதனைகள்:
             தமில்சுவடிகளை தேடி தொகுத்து அறிவியல் முறைப்படி பாதுகாத்தல், அவற்றை புதுப்பித்தல்,வெளியிடல் போன்ற பணிகளை சிறப்புடன் செய்து வருகிறது, ஓலைசுவடித்துறை.நீரகழாய்வுத் துறையோ , ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் புதையுண்ட  கல் நங்கூரங்களை கண்டறிந்துள்ளது.சித்தமருத்துவ துறையோ மக்களிடம் நேரடியாக சென்று தமிழ் சித்த மருத்துவ பெருமையை பறைசாற்றி வருகிறது.தொழில் மற்றும் நிலவியல் துறை பத்து வருடங்களுக்கு முன்னரே சிறந்த தொழில்நுட்ப துறையாக போற்றப்பட்டது.அயலாரின் தமிழ் மொழி ஆர்வத்தை வளர்க்க சீனா, ஜப்பான்,போலந்து,செக்கோசுலோவேகியா,அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா முதலிய பல நடுகளிலிருந்து வந்தோருக்கு தமிழ்மொழி,கலை,இலக்கியம்,பண்பாட்டுக்கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது,அயல்நாட்டுத் தமில்கல்வித்துறை.இவ்வாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் சாதனைகள் பற்பல......

         என்னதான் தமிழின் வளம் விண்ணைத்தொட்டாலும் மண்ணைக்கவ்வும் வளக்குமொழி பயன்பாட்டை  மாற்றவியலாது.இயல்,இசை,நாடகம் எனப் பிரிந்து இணைந்து வாழ்ந்து வரும் தமிழை போற்றுவோம்.

Friday, 27 July 2018

தலையங்கம்

மனித கனவுகள் சொல்லும் கதை

#பாப்பு

"கனவு காணுங்கள்", என்று அப்துல் கலாம் கூறினார். அவ்வாறாயின் நாம் வருடத்திற்கு சராசரி 2160 கனவுகள் காண்கிறோம்; நாம் எதிலும் சாதிக்கவில்லையே என ஆசிரியரிடம் கேட்டதற்கு,
"அட பெண்ணே!!! அக்கனவு என்பது உன்னை தூங்கவிடாமல் செய்யும் லட்சியத்தை குறிக்கிறது" என்றார்.
கடைக்கோடி மனிதனுக்கும் உரியதான கனவு சாதனையாளர்களுக்கும்,சரித்திரம் படைத்தவர்களுக்கும் பலவிதமான கண்டு பிடிப்புகளை உருவாக்க உறுதுணையாக இருந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
"எங்கெங்கும் காணிணும் சக்தியடா",என பாரதி கூற, அந்த சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டதாய்,ஒவ்வொரு பொருளையும் உருவாக்க வல்லதாய் அணு(atom) விளங்குகிறது. அணுவின் உருவத்தை பற்றி அறிஞர்கள் பலர் ஆராய்ந்தனர். டென்மார்க் நகரைச் சேர்ந்த அறிஞன் ஒருவன் அணுவைப் பற்றி இரவில் பலவாறாக யோசித்து தூங்கச் செல்கிறான்.தூக்கத்தில் ஏதோ ஒரு கனவு அந்த மடையனுக்கு வர ,திடுக்கென்று எழுந்து அவன் மேசையில் இருந்த காகிதத்தில் ஏதோ கிறுக்குகிறான்.காலையில் எழுந்து காகிதத்தைப் பார்க்க ஒன்றும் விளங்காதவனாய் விழிக்கிறான்;அடுத்த நாள் இரவும் அவனுக்கு அதே கனவு வர;சட்டென எழுந்து அவன் ஆய்வுக்கூடத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து ஏதோ கண்டுபிடித்து களிப்பாகியிருக்கிறான்.அதுவே இன்று அனைவராலும் ஏற்கப்பட்ட "போரின் அணுக்கொள்கை".இதுவே நாளடைவில் "குவாண்டம் கொள்கைக்கு" அடித்தளம் ஆயிற்று.
"சூரியனைச் சுற்றி கோள்கள் வலம் வருவது போல-அணுவில்
அணுவின் கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட சக்தியுடன் பயனிக்கிறது".
            என்று கூறிய அறிஞனே 1922 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போர். இக்கண்டுபிடிப்பே இயற்பியலின் ஆடித்தளமாக விளங்குகிறது.
அடடே! அரிய கனவு; அரிய கண்டுபிடிப்பு.
'காணும் கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறது', என்னும் ஐயன் வாலன்ஸின் கருத்து இன்று தான் எனக்கு விளங்குகிறது.
சிறுவயதிலோ என் பாட்டி,கனவில்
,"வீடு தீப்பற்றினால் வீட்டில் பெண் தாவணிகட்டுவாள்,
காரியமாவது போல் தோன்றினால் வீட்டில் யாரோ மூன்று முடிச்சு போடுவர்;
கல்யாணம் ஆவதுபோல் தோன்றினால் யாரோ எட்டு காலில் செல்லுவர்;
பாம்பு துரத்துவதுபோல் தோன்றினால் கஷ்டங்கள் வரும்,
பாம்பு கடிப்பதுபோல் தோன்றினால் 71/2 வரும்;
வெள்ளப்புடவையில் பெண் வந்தால் மாரியம்மா"
              என்று அர்த்தங்களை அள்ளிவிட "அப்படியா அம்மாச்சி" என வாயைப் பிளந்து கேட்ட காலங்கள் உண்டு.இவ்வாறு கனவுகள் வந்தால் இந்தெந்த பலன் என மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் பெண்களைக் கண்டு சிரிப்பதா?அழுவதா?
      அதேபோல், ஒரு பெண்ணிற்கு வந்த சுவாரசியமான கனவு இது,

    கனவில்...
                       -கனவுகள் மலரும்....

Tuesday, 24 July 2018

#தொடர்கதை

 மரணம் உனதல்ல!!!!
# தமிழ் கீதன்

காலை 11 மணி.  கோவை மாநகருக்கு வெளிப்புறமாக  SPG நகாில் நன்கு இயற்கை வசதி வாய்ந்த ஒரு நல்ல தனிமை வாய்ந்த விடு.கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து தலைநிறைய மல்லிகைப் பூவுடன் விதவிதமாய் சமைத்துக் கொண்டிருந்தாள் , வித்யா.ஆனால் , இந்த வருடமும் தன் திருமண நாளை மறந்தவனாய் காலையிலேயே காவல் நிலையம் சென்றுவிட்டான்,ஆதி. எனினும் ஆதி தன் பணிச்சூழலிலே அதிக நேரம் செலவிடுவதை வித்யா வருத்தத்துடன் எதிா்கொண்டதே இல்லை .காரணம் , வித்யாவும் மாவட்ட துணை ஆட்சியராக சிலகாலங்கள் பணிபுாிந்தவள் .ஆதியின் பணி முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவள் .எனவே ,ஆதி மதிய உணவுவேளைக்கு வரும்போது அவனை ஆச்சாியாபடுத்த தான் இந்த விருந்து சமையல்.
     காவல்துறை கண்காணிபாளா் அலுவலகம் (SP office). "ஏகாம்பரம் ! வண்டிய எடுங்க, பக்கத்துல கடைக்கு வரைக்கும் போய்ட்டு வரலாம்" என தன்னுடன் நீண்ட நாள் பணிபுாியும் ஏட்டையாவை அழைத்தான். "இதோ வரேன் Sir " என கூறி தான் எழுதிக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுப் புறப்பட எத்தனித்தாா் , ஏகாம்பரம்.
       வண்டியின் இயந்திரத்தை ஓடவிட்ட பிறகு , " எங்க sir  போகனும் என வினவினாா் ஏகாம்பரம்." பக்கத்திலுள்ள நகைக்கடை வரை போங்க " என கூறினான் ஆதி.
வண்டி , அலங்காித்த நகைக்கடை வாசலிலே சென்று நின்றது .வரவேற்பு , அழகிய பெண்ணுடனும் ஒரு குளிா்பானத்துடனும் காத்திருந்தது. வந்த வெயிலில் களைப்பாறுவதற்குள் ஒரு அழகிய 'நெக்லசை' தோ்ந்தெடுத்தான் ஆதி. நெக்லசின் விலையை கேட்டான். அவனிடம்  இருக்கும் பணத்தை விட ₹5000 அதிகம் கூறினாா் கதா்சட்டை அணிந்த அந்த கடைக்காரா்.
  கையை பிசைந்து கொண்டே செய்வதறியாது முழித்தான் , ஆதி .அவன் முகச்சாடையை வைத்தே விசயம் அனைத்தையும் ஏகாம்பரம் புாிந்து கொண்டாா்." நம்மள மாதிாி ஆளுக்கு மாசக்கடைசினாலே இப்படி தான். கைய நீட்ட வேண்டிய இடத்துல நீட்டிருந்தா இப்போ நம்ம யாா்கிட்யுைம் கைய ஏந்தி நிக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது " என புலம்பினாா் , ஏகாம்பரம்.
  " என்ன ஏகா பன்றது , அதுக்காக எல்லாரு மாதாி லஞ்சம் வாங்க சொல்றியா, ஏதோ இன்னைக்கு கல்யாண நாளாச்சே அவளுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு நினைச்சேன் " என ஆதி கூறி முடிப்பதற்கு முன்பே மறித்தார் ஏகாம்பரம்.
   "கல்யாண நாளா?" சொல்லவே இல்ல. வாழ்த்துக்கள் சார். இருங்க என் ஏ.டி.ம். கார்டுல போய் பணம் எடுத்துட்டு வந்துடுறேன். என அன்பாய் ஏகாம்பரம் கூறினாா்.ஆதி மீது அவா் கொண்ட அதிக அக்கறையயையும், மரியாதையையும் அவர் என்றும் குறைத்துக்கொண்டதே இல்லை.
  " இல்ல பரவால்ல ஏகா, வேற விலை கம்மியா வாங்கிக்கலாம் " , ஆதி முனுமுனுத்தான்.
      " விடுங்க sir, என் மகன் மகளுக்கு , நா செய்ய மாட்டேனா" என கூறி வெளியே கிளம்புவதற்குள் ஏகாவிற்கு அலைபேசி அழைப்பு  வந்தது .
அலைபேசியில் பேசிவிட்டு திரும்பினாா். Sir ,A2 police stationல இருந்து inspector தான் பேசினாா். அவுங்க area councillor death ஆம் .உங்கள வரமுடியுமானு கேட்க சொன்னாா்.
  " அவுங்க area death தான அவுங்களே formalities முடிக்கலாமே"
"இல்ல sir ; நம்ம புது DIG  madam அவந்திகாவும் வராங்களாம்.அதான் நீங்களூம் வந்தா நல்லாருக்கும்னு சொன்னாா்".
  ஒ ! அப்படியா ! இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானே .அந்த Madam இவ்ளோ சின்ன வயசுலேயே இந்த பொிய பதவிக்கு வந்ததுக்கு காரணம் அவுங்க புத்திசாலித்தனமும் அவுங்க திறைமையும் தான்.நம்மள மாதிாி அவுங்களும் கரை படியாத கைனு வைசுக்கோங்களே.ஆனால் Madam ரொம்ப strict .வாங்க உடனே spotக்கு போலாம்
  " Sir, இந்த நகைய அப்புறம் வாங்கிக்கிறோம்" என இருவரும் அவசரமாய் புறப்பட்டனா்.
 இருவரும் அந்த இடத்திற்கு சென்ற சிலநிமிடங்களிலே DIG அவந்திகா வந்தாா்.இடத்தை நன்றாக கூா்ந்து கவனித்தாா்.
"மிஸ்டர் ஆதி , i want you to report me about  this Case as soon as  possible." என கூறி விட்டு கிளம்பினார் . சிறிது நேரம் கழித்து , D.I.G, அலுவலகம் புறப்பட்டான்,ஆதி. சிறிது நேரம் காத்திருப்பிற்கு பின், அவந்திகா இருக்கும் அறையை அடைந்தான்.
"குட் ஈவினிங் mam,.இறந்த ஆளு அந்த வார்டு கவுன்சிலர் mam, பெயர் துரைராஜ் வயது 48, இறந்தவர சுத்தி கொலை செய்யயபட்ட மாதிரி எந்த evidence ம், இல்லை  , so, we think most probably the natural death  ,and waiting for postmortem report mam அவரோட அந்த gym ல இருந்து அவர் mobile போனோட 50,00,000ரூபாய் பணமும்  கைப்பற்றி இருக்கோம் .இது தான் litte பிட் confusing" என கடகடவென ஒப்பித்தான் ஆதி .
ஆதி இந்த department ல நல்லவனா இருந்தா மட்டும் போதாது .புத்திசாலியாகவும் இருக்கணும் .அங்க உள்ள treadmill switch on லேயே இருந்திச்சி.அது மட்டும் இல்லாம அவர் body கு பக்கத்துல some amount of pollen grains (மகரந்த தூள்)கிடந்துச்சு . But அந்த மாதிரி எந்த மரமோ செடியோ அங்க பக்கத்துல இல்ல .plus நீங்க சொன்ன மாதிரி 50,00,000 ரூபாய் பணம். இதுலாம் வச்சி பாக்குறப்போ ,Do you think that  this is a natural death ?"வினவினார், அவந்திகா.
" Sorry mam" என வெட்கத்தோடு தலை குனிந்தான்.
ஆதி, "Dont be gentle; be smart and update me the case regularly .U can go now!அதட்டினாள் அவந்திகா.
பெரும் வெட்கத்துடனும் சோகத்துடனனும் காவல் நிலையம் திரும்பினான் ஆதி.
                                                                                             -தொடரும்.




Sunday, 22 July 2018

#கடிதம்

#கடிதம்

#தமிழனுக்கு ஒரு கடிதம்

#மிகலி

வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி!அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.
நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால் தான், எத்தன்னையோ இழந்தனர்; ஒன்று சொல்லட்டுமா?
தமிழ்க் கலை நல்ல கலை தான்; அதிலும் யாழிசை நல்ல இசைதான்; ஆனால் வாழ்ந்ததா?இல்லை, ஏன்?முன்னே செல்வாக்கைப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள்; பிறகு பொதுமக்கள் மறந்தார்கள். இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதே நிலை இருப்பதை எண்ணிப்பார்; உன் மனம் புண்படும்.
நீ இதை மறுக்கலாம். அன்று அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற நிலைமை இருந்ததை நீ எடுத்துக் காட்டலாம். இன்று பொதுமக்கள் எவ்வழி அவ்வழியே ஆட்சியாளர் என்று எடுத்துக் கூறலாம்.
இப்படி உன்னை நீ எம்மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுதான் உனக்குச் சொல்கிறேன். பொதுமக்களின் விருப்பம் போல் ஆட்சி நடப்பதாகச் சொன்னால், பொதுமக்கள் போரை விரும்புக்கிறார்களா, அணுக்குண்டையும் பிற குண்டையும் விரும்புக்கிறார்களா, வேலையில்லாத் திண்டாட்டத்தை விரும்புக்கிறார்களா, குடி இருக்க வீடும் அறிவு வளர்க்கக் கல்வியும் உடல் வளர்க்கக் கஞ்சியும் இல்லாத கொடிய வறுமையை விரும்புக்கிறார்களா என்று மெல்ல எண்ணிப்பார். உனக்கே தெரியும்
பொதுமக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை; அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள்; யார் யாரோ நீர் சேர்த்துப் பிசைந்து தமக்கு வேண்டியவ்வாறெல்லாம் உறுவங்களைச் செய்து கொள்கிறார்கள்.
சரி,நீ சொல்கிறப்படியே பார்ப்போம்.இன்று ஆட்சி எல்லாம் ஓட்டுப் போடும் மக்களின் கைகளைப் பொறுத்தது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஓட்டுப் போடும் போது தங்களைப் பற்றியாவது தமிழ்நாட்டைப் பற்றியாவது தமிழைப் பற்றியாவது கவலைப்படுகிறார்களா?அவர்கள் கவலைப்படாத நாடும் மொழியும் யாருடைய வல்லமையை நம்பி வாழ முடியும்?வறுமையால் வாடும் அறிஞர் சிலருடைய துணை மட்டும் போதுமா?

Friday, 20 July 2018

#பதிவுகள்

கவையாகிக் கொம்பாகி...
#மாயாவி

             அங்கோர் பூக்களற்ற குல்மொஹர் மரம் சாலையோர நடைபாதையில் வளர்ந்திருந்தது. கருகருவென வைரம்பாய்ந்த அடிமரம் பெற்றிருந்தது அது. அடரப் படர்ந்திருந்த அதன் கிளைகள் சாலையில் செல்வோருக்குக் குளிர்நிழலைக் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. கைமாறு எதிர்ப்பார்க்காத பேருதவி அது. கடந்த பங்குனி வெயிலுக்கு செந்நிறப் பூக்கள் மரம் நெடுகச் செறிந்திருந்தன. உதிர்ந்த பூக்கள் கொதிக்கும் தார்சாலைக்குச் சிவப்புக் கம்பளம் பூசிச் சூடுதணித்திருந்தன. இந்த ஆனி மாதத்தில் அவ்வளவு வெயிலும் இல்லை: பூக்களும் இல்லை. பதிலாக, பழுப்புநிற இலைகள் அம்மரத்திற்கு புதுவண்ணம் பூசியிருந்தன. சாலைக்கு அந்தப் பக்கமாக ஒரு வானளார்ந்தக் கட்டிடம் பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் கம்பீரமாய் வீற்றிருந்தது. சாலையையும் அந்த வானடையக் காத்திருக்கும் கட்டிடத்தையும் மஞ்சள்நிறச் சுவரொன்று பிரித்திருந்தது.
 அம்மரமும்  அந்தக் கட்டிடத்தைச் சாலையிலிருந்து பிரிப்பதில் தன்னாலானவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. அதற்குத் தண்டனையாகக் சுவரைத் தாண்டிக் கட்டிடத்தை எதிர்க்கத் துணிந்த அதன் ஒருசில கிளைகளை வெட்டியிருந்தார்கள். வேர்களை மறந்துவிட்டனர் போலும்! நகரமுடியாத, குரல்கொடுக்கவும் முடியாத அம்மரத்தால் படர்தலைத்தவிர வேறு என்ன செய்துவிட முடியும்? அம்மரத்தினடியில் நாற்பது வயதையொத்த பெண்மணி ஒருவர் தரையில் கிழிசல்கண்ட கம்பளமொன்றை விரித்திருந்தார். அதன்மீது வெம்பிய மாம்பழக்குவியலும் அம்மரத்தின் காய்ந்த சருகுகளும் பரப்பப்பட்டிருந்தன. சாலையில் செல்வோர் யாரும் மாம்பழம் வாங்கியதாகத் தெரியவில்லை. அப்பெண்மணியையும் மாம்பழங்களையும் ஏறெடுத்தும் காணவியலாத அவசரத்தில் மக்கள் விரைந்து கொண்டிருந்தனர். அப்பெண்மணி யாரையும் கூவி அழைக்கவுமில்லை. அம்மரம் மட்டும் தன் நிழல்கொண்டு அப்பெண்மணிக்கு உதவிக்கொண்டிருந்தது. தூரத்திலிருந்து ஓர் உயர்ரக மகிழுந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு சாலையில் விரைந்தது. அது உமிழ்ந்த புகை, காற்றுக்குக் கருநிறம் பூசியது. அதன் வேகத்தில் அம்மரக்கிளைகளுள்சில பயந்துபோய்க் காற்றோடு ஓடிவிட எத்தனித்தன. மரம் அவை தப்பிவிடாது இழுத்து வைத்துக்கொண்டது. கரியை வெளியிடுவதில் வாகனங்கள் வேறுபடுவதில்லை. வேற்றுமை, அவ்வாகனங்களின் தோற்றத்திலும் அவ்வாகனங்களை இயக்குவோரிடத்தில் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் அம்மரம் கண்டுகொள்ளவில்லை. எப்பொழுதும்போல் பழுத்த இலைகளுள் சிலவற்றை புன்னகையின் சின்னமாய் உதிர்த்துக்கொண்டிருந்தது அம்மரம். அந்த மரத்தில் பறவைக்கூடுகள் எதுவும் தென்படவில்லை. பறவைகளை அக்கட்டிடத்தின் உரிமையாளர்கள் விரட்டியிருந்தார்கள். பயம்கொண்ட பறவைகளும் பறந்திருந்தன. பறந்துசென்ற பறவைகளையெண்ணி அம்மரம் வருத்தம்கொள்ளவில்லை. மரத்தால் பறக்கமுடியாத காரணததால் மரம் பறக்கவில்லை; அவ்வளவுதான். பொழுதுசாயத் தொடங்கியது. பெண்மணி, கடையைச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில்  நீருண்ட மேகங்கள் வானைச் சூழ்ந்துகொண்டன. அம்மேகங்களுக்கும் அக்கட்டிடம் வானை எட்டுவதில் உடன்பாடு இல்லைபோலும். நீலவானை ஒளித்து வைக்க நினைத்து அவை கருநிற அரிதாரம் பூசிக்கொண்டன. கார்முகிலிலிருந்து மண்ணோக்கிப் பாய்ந்த முதற்துளி, தார்சாலையில் விழுந்து மறைந்தது. அதனைத் தொடர்ந்து கனமழை கொட்டத்தொடங்கியது. அம்மழையில் குல்மொஹர் மரத்தின் பழுத்த இலைகள் அடித்துச் செல்லப்பட்டன. எதையும் பொருட்படுத்தாத அம்மரமும் புன்னகையை வெளிப்படுத்த  இலைகளற்று நாளைய தினத்தை எதிர்கொள்ளத் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருந்தது

Thursday, 19 July 2018

#கவிதைகள்

ல்தகா சைஆ



#கழுத


காதலிக்க ஆசை
காதலர்கள் சங்கம் என்னையும் உறுப்பினராக்க வேண்டும்
காதல் என்னை பரிசீலிக்க வேண்டும்
கனவின் கனவாக வேண்டும் என் காதல்
வார்த்தை பஞ்சத்தால் உதடுகள் தத்தலிப்பினும்
இருவர் கண்களும் பல்லாயிரம் மொழிகளை உருவாக்க வேண்டும்
யாரும் கண்டிராத என் அழகின் ஆழம்
அவன் ஆள வேண்டும்
பத்து விரல்கள் ஐந்தாக மாறும் வேலை
என் நாணங்கள் நாண்டுக்கொள்ள வேண்டும்
அவன் மூச்சுக்காற்றுக்குள் பல முத்தங்கள் ஒளிந்து கொண்டு
என்னை துரத்த வேண்டும்
காத்திருந்து பெற்ற காதலை
சிலேடையில் சிலேடையாக்க வேண்டும்
பேணா முள்ளை பதம் பார்க்க வேண்டும்
பலமுறை அணிந்த ஆடை எனினும்
துகிலுரியப்போகும் கள்வனை எண்ணிக்கொண்டு
ஓயாமல் மாற்ற வேண்டும்
காவியக் காதலன்கள் வேண்டாம்;பேரழகனும் வேண்டாம்
எனக்கென ஒருவன் ;எனக்காய் வேண்டும்
காதல் கோயில்களில் எங்கள் பாதங்கள் முத்தமிட வேண்டும்
இரட்டைப்படை எண்களாய் அல்ல;ஒற்றை படை எண்ணாய்
பேருக்காக காதல் செய்த பாவிகள் பலருண்டு
நான் என் பேருக்காய் காதல் செய்ய வேண்டும்
ஆம்,என் பெயரை துரத்தி வரும் பெயர் அதுவாக வேண்டும்
சூரியனும் வேண்டாம்;சந்திரனும் வேண்டாம்
இப்புவியும் வேண்டாம்; எப்புவியும் வேண்டாம்
ஒரு புள்ளி வேண்டும்
நெருக்கம் எங்கள் தாயகமாக வேண்டும்
அவன் வருமுன் இருந்த தனிமைகள்
காதல் சல்லடையில் சற்றே வழுக்கிவிழ வேண்டும்
எங்கள் தனிமைகள் மட்டும் தேங்க வேண்டும்
என் அளவற்ற ஆசைகளின் முன்னோட்டம் இது
காதல் தெய்வங்களே,
            என்னவன் எங்கோ இருக்க
            அவனவள் இங்கிருக்க
            காலத்தை சீக்கிரம் கடத்தி விடு
            முடிந்தால்,எம் இருவரையும் கடத்திவிடு
            உம் உலகத்திற்கு


Wednesday, 18 July 2018

#தலையங்கம்

மனித கனவுகள் சொல்லும் கதை
#பாப்பு


     ஓர் அடர்ந்த காட்டில் இருள் சூழ்ந்த
வேளையில்,தன்னந்தனியாய் நிற்க, என்னை தாக்க வந்த புலியை காலால் எட்டி உதைத்தேன்;திடீரென்று பூரிக்கட்டையால் யாரோ அடிப்பதாய் உணர்ந்தேன்;சட்டென்று திடுக்கிட்டு எழுந்தபோது கனவென உணர்ந்தேன்; நான் உதைத்தது புலியல்ல,என் தாயென விளங்கியது.
"கனவிலோ நான் சாகசக்காரி,
நிஜத்திலோ நான் சாதாரண ஒருத்தி"                                      
"மனித இனத்துக்கே உரியது கனவு",அறிஞர் பலர் கூறுகையில் "விலங்குகளுக்கும் கனவு காணும் ஆற்றல் இருக்கிறது"என சிலதரப்பு வாதிகள் சொல்கின்றனர்.அவ்வாறாயின் விலங்குகளும் கனவில் மனிதர்களைப்போல பேசி,ஆடிப்பாடி, தங்களை சிறந்த கதாப் பாத்திரங்களாக உருவெடுத்துக் கொள்ளுமோ???
     

"தொலைக்காட்சியில் காணும் காட்சிகள் மின்னலைகளால் உருபெற
கனவில் காணும் காட்சிகள் நினைவலைகளால் உருபெருகிறது"
      
" மனிதனின் சிறந்த மருத்துவர் தூக்கம்" என்று ஆய்வுகள் சொல்கிறது,அப்படியானால் 24 மணிநேரமும் தூக்கத்தைப் பெற்று கனவு உலகில் மனம் என்னும் திரையைக் கொண்டு அதில் ஊரைச் சுற்றி, பிடித்த உணவுகளை உண்டு,நிலவுக்கு சென்று ஆடிப்பாடி நாளைக் கழித்தால் உடல்நலம் சீராக இருக்குமோ?அவ்வாறு தான் செய்திருப்பாரோ வருடத்தில் ஆறு மாதங்கள் தூங்கி கழித்த கும்பகர்ணன்.
       சில கனவுகள் நம்மை வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்லும்,
"சூரியன் காலையில் தோன்றயில் அதின் கதிர்களைப் பரப்பும்
மாலையில் தன் கதிர்களை தனக்குள் உள்வாங்கி இருளை உண்டாக்குவது போல"
       சில கனவுகள் எழுந்த மறுகணத்தில் நம் நினைவை விட்டு நீங்கிவிடும். ஏதோ கண்டோம் என தோன்றும். ஆனால் என்னவென நினைவிருக்காது.
"கனவு காணுங்கள்", என்று அப்துல் கலாம் கூறினார். அவ்வாறாயின் நாம் வருடத்திற்கு சராசரியாக 2160 கனவுகள் காண்கிறோம்; நாம் எதிலும் சாதிக்கவில்லையே என ஆசிரியரிடம் கேட்டதற்கு,
                             -அடுத்த வாரம் கனவுகள் மலரும்....

Tuesday, 17 July 2018

#பதிவுகள்

செட்டிநாடு சமையல்( காரைக்குடி)
#மதி

நலன், சாப்டாட்டு பிரியன், கொஞ்சம் குண்டாத்தி தான். தட தடவென சத்தத்தில் அசைந்து அசைந்து செல்லும் வெள்ளையனின் வண்டியில் (இரயிலில்) செல்லுகையில் ஒரு பாட்டி அவனிடம் சுண்டல் நீட்டுகையில் இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து போன அவன் ஆத்தாவின் நினைவு வந்தது.இந்நேரம் அவள் இருந்திருந்தால் இரயில் பயணத்தில் என்னென்ன எடுத்து வந்திருப்பாளோ இடியப்பமோ,கொழுக்கடையோ,அதிரசமோ,குழிப்பணியரமோ, கருப்பட்டி பணியரமோ,பால் பணியரமோ,சீயமோ,கவுணி அரிசியோ,கந்தரப்போ என்று எண்ணி கொண்டான்.காரணம் அடுத்த  ஊர் அவன் ஆத்தா வழி மாமன் வீடு, என்று நினைவுக்கு  வந்தது.அங்கு தான் அவன் சென்று கொண்டிருக்கிறான்.வீட்டை முழுதாய் சுற்றிப் பார்க்க ஒரு நாள் வேண்டும்.
  "ஆத்தங்குடி" வந்ததும் அன்பு மாமன் அக்கறையாய்
 அழைத்துப் போக வந்தான்.வீட்டை அடைந்ததும், ஆச்சியும் ஆயவும், ஆயாவோட ஆயவும் ஆசையாய்  அழைச்சங்க வீட்டுக்குளே.
"முகப்பு நிலையே கவிதைகள் பல சொல்லும் ...முகப்பு விளக்கும், முகப்பு உத்திரமும் தொங்கு சர விளக்கும், பார்த்து இமைக்காத என் விழிகளில்... முகப்பழகே முத்திரையாம் செட்டிநாடு
 வீட்டிற்கு" என்று மனம் சொல்லியது.

       முற்றத்தின் ஓரத்தில் துளசி மாடம், அழகழகாய் அறைகள், முடிஞ்சுது னு பாத்த முடியாத சமயலறை...
ஆரம்பித்தது உபசரிப்பு காப்பியோடு...

மெதுமெது இட்டிலியோடு 
கதம்பசட்டினியுமாய்....
மெத்மெத்தென்று பணியாரத்திடு
மிளகாய் சாட்டினியுமாய்....
மெதுவான வடையோடு 
தேங்காய் சட்னியுமாய்....
இனிக்கும் தங்கை பாலோடு
இடியாப்பம் செய்யட்டுமா...
இடிச்ச அரிசியோடு
குழாப்புட்டு செய்யட்டுமா...

     என்று ஆச்சி கேட்டாக,
கேட்டதே மனம் நிறைய சாப்பிட்டவுடன் வயிறும் நிறைந்தது.
அவர்களின் சமையலில் சிறப்பே அவர்கள் பயன்படுத்தும் மசாலாக்களும்,அவற்றின் மனமும் ,காரத்தின் சுவையுமாகும்.

        மதியம் வந்துடுன்னு மறுபடியும் ஆச்சி முடியாத பட்டியலிட அவன் முயன்று ஒன்றை கண்டுபிடித்தான்.வெண்மையான அரிசிச்சோற்றுடன் காய்கறி மண்டி,
அதன் அரிசி கழுவிய நீரை உபயோகிப்பது தான் அதன் சிறப்பு.
"மண்டி இருந்தால் உண்டி பெருகும் என்பது செட்டிநாடு பழமொழி".

இவ்வாறு இரண்டு நாள்களும் உணவும்,உபசரிப்புமாக முடிய கேளிக்கை பேச்சுகளும் சென்னையில் தனிவீட்டுப் பிள்ளையாக  வசிக்கும் அவனுக்கு புதியதாய் இருந்தன.கிளம்பும் நேரமும் நெருங்க பயணத்தின் போது சாப்பிட ஆத்தா கற்கண்டு சதாம் கட்டிக்கொண்டு தந்தாள். அனைவருடனும் விடைபெற்றுக் கொண்டு, கற்கண்டு சாதத்துடன் தன்னுடன் வர மறுக்கும் மனதை இழுத்துக் கொண்டு புறப்பட்டான்.

இன்று செட்டிநாடு எனும் வார்த்தை உணவு விளம்பரங்களில் மாயத் தோற்றத்திற்காக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது

 உயிர் காக்கும் உணவு "கலையாக" மருந்தாக உருப்பெற்ற நாட்டில், அயலானின் உணவுக்கு நோயை விலை கொடுத்து வாங்கும் இன்றைய தமிழகம்......ஏனோ? வினாவாக....




Monday, 16 July 2018

#தலையங்கம்

இந்தியப் பெண்மையின் வெற்றி
#கழுத

இந்தியா இன்றளவும் கண்டுகொள்ள தவறிய வடகிழக்கு மாநிலத்தில்,இந்தியர்கள் கண்டுகொள்ள மறுக்கும் விவசாய குடும்பத்தில்,வயல்வெளியில் தம் மாநிலத்தின் விளையாட்டான கால்பந்தாட்டத்தை விளையாடி களித்திருந்த சிறுமியை,ஓட்டப்பந்தயத்தை நோக்கி திருப்பிவிட்டார்,ஒரு உடற் பயிற்சி ஆசிரியர்.இந்த நிகழ்வு நடந்து 18 மாதங்களே ஆகின்றன,ஆம் 18 மாத பயிற்சியில் தான் ஹிமா தாஸ் தங்கத்தை தன்வசம் ஆக்கியுள்ளார்.இந்திய சரித்திரத்தை சற்றே திருப்பிபோட்டுள்ளார்,இந்த சீமாட்டி.

ஐந்தாறு வயதிலிருந்தே பயிற்சி எடுக்கவேண்டிய ஒரு விளையாட்டில் 18 மாத பயிற்சியில் 18 வயதே ஆனா ஹிமா U20 உலக தடகள சாம்பியன் ஆகியிருக்கிறார் என்றால், நம்புவது சற்று சிரமமே.சரித்திரங்கள் படைக்கப்படும்பொழுது சில விதிகளும் சாட்டை அடிக்கு ஆளாகும்.அப்படி பட்ட நிகழ்வே இது.

ஹிமா தங்கம் வென்ற போட்டியானது,400 மீட்டர் ஓட்டப்போட்டி,அதில் பல நாட்டை சேர்ந்த வீராங்கனைகளும் ஓடிவருகின்றனர்,நம் எதிர் பார்ப்பை போலவே இந்தியாவின் சார்பில் வரும் ஹிமா பின்னோக்கியே வருகிறார்.போட்டி முடிவதற்கு 80 மீட்டர் தொலைவே உள்ளது.அப்போது பின்னாலிருந்து ஒரு புயல் வேகமெடுத்து வருவது போல் வர்ணனையாளருக்கு தெரிய,அவர் கூறுகிறார்,"Hima das,an Indian is coming forward.she is seeing the track;she is seeing the history that no one from India had become the world champion in athletic track event and atlost now she crossed the track and she made the Indian history." இதை அவர் கூறும்பொழுது வெறும் வார்தைகளாகவே அவருக்கு தெரிந்திருக்கும். ஆனால்,இந்தியர்களுக்கு மட்டுமே இதன் பின் இருக்கும் உணர்ச்சி புரிப்படும்.
சிறு வயதில் என் பாடநூலில் நேரத்தின் அருமையை உணர்த்த ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.அதில் உள்ளவாறு,உலக தடகள போட்டியில் இந்தியா சார்பாக பி.டி. உஷா ஓடிக்கொண்டிருப்பார்,அவரும் மற்றொரு வீராங்கனையும் ஒரே அளவில் போட்டியை முடிப்பர். யார் வெற்றிபெற்றார்கள் என அறிந்து கொள்ள உலகமே ஆவலாய் இருந்தது.நடுவர்கள் முடிவை அறிவித்தனர்;உஷா இரண்டாவது இடம் பிடித்தார்.ஆம்,0.01விநாடி வித்தியாசத்தில் தங்கம் இந்தியாவின் கைகளில் இருந்தும் உஷாவின் கைகளில் இருந்தும் நழுவியது.அன்று நழுவிய தங்கத்தை இன்று தட்டிபரித்து விட்டாள் ஹிமா.
அந்த வெற்றியில் சிறிதளவும் பங்கு கொள்ளாத நமக்கே கண்ணீர் மல்கும் பொழுது,இந்தப் பெருமையைத் தேடித்தந்த அந்த சிறுமியின் கண்கள் தேசிய கீதத்தை படும்போது கலங்கியதில் ஆச்சரியமேதுமில்லை.
ஆனால்,அவள் கண்களில் சிறிது பயம் எட்டிப்பாற்பதை என் உள்ளம் படம் பிடித்துவிட்டது.ஆமாம்,புதுக்கோட்டை சாந்தியைப் போல என்னையும் பாலினச் சோதனைக்கு உட்படுத்தி சீரழித்து விடாதீர்கள் எனக் கெஞ்சுகிறது அந்தக் குழந்தை.ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இல்லாத அந்த பாலின வேறுபாடு ஏன் பெண்களின் வெற்றிக்கு பின் மட்டும் முத்திரை குத்தப் படுகிறது.இது உலக அளவில் பெண்களுக்கு நடக்கும் மிகப்பெரிய அநீதி யாகும்.
கலங்காதே கண்மணி,
வெற்றி சிறிதே!வியந்துபோகதே
பெருவெற்றிக்காய் பயணப்படு
தோல்விக்கு பழக்கப்படு
வெற்றிகள் குவிய நிதானப்படு
உன் பிறப்பை இப்புவிக்கு உணர்த்திவிட்டு செல்!
சந்திப்போம் உனது அடுத்த வெற்றியில்....

Sunday, 15 July 2018

#கடிதம்

#தமிழனுக்கு ஒரு கடிதம்

#மிகலி

அன்புள்ள எழில்,
        நீ எழுதிய கடிதங்கள் சுவையாக இருந்தன.
தம்பி!இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பகுதிகளில் ஒன்றை மட்டும்போற்றுகிறவன் உறுபடியாவதில்லை. உடலை மட்டும் பொற்றி உரமாக வைத்திருப்பவனும் அழிகிறான். அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தைமட்டும் தூய்மையாகப் போற்றிக் கப்பற்றுகிறவனும் இடைநடுவே அல்லல்படுகிறான்;அவனுடைய உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லல் படுகிறது.உடலும் வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம் வானளாவ உயரவேண்டியதாக இருக்கலாம்; ஆனால் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது. இந்த உண்மையை நன்றாக உணர்ந்தவர் திருவள்ளுவர். அறநெறியும் வேண்டும். பொருள்வளமும் வேண்டும். இன்ப வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள் தான். அறத்தை நினைந்து பொருளை மறக்கும்படியாகத் திருவள்ளுவர் கூறவில்லை. பொருளையோ இன்பதையோ போற்றி அறத்தை மறக்கும் படியாகவும் அந்தப் பெருந்தகை கூறவில்லை. உலகத்து நூல்களில் பல அறம் பொருள் இன்பம் மூன்றில் ஒவ்வொன்றை மட்டுமே வலியுறுதிருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் பல பகுதிகளையும் போற்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த வந்த திருவள்ளுவர் இந்த மூன்றையும் தெளிவுறுத்தியுள்ளார். தமிழராகிய நாம் திறவள்ளுவரைப் பெற்றிருக்கிறோம்; திருக்குறளைப் பெற்றிருக்கிறோம். நம்மில் சிலர் அந்த நூலைக் கற்றும் இருக்கிறோம். ஆனால் திருவள்ளுவர் கூறியபடி வாழவில்லை; நல்ல தன்மை தேடுகிறோம்; வல்லமை தேடவில்லை. அதனால்தான் தாழ்வுறுகிறோம்.

நீ உடனே இதை மறுக்க முன்வரக் கூடும். அதற்கு முன்பே நான் காரணம் சொல்லி விளக்கிவிடுகிறேன்.

தமிழ்மொழி நல்ல மொழி தான்; ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா?பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா?இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா?தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு தந்தோமோ?நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமோ?ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா?இல்லையானால் வெறும் பேச்சு ஏன்?
வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி!அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.

Saturday, 14 July 2018

#தலையங்கம்

காலத்தின் கடைசி கருணை
#கழுத

இந்நாள், உரிமைகள் மறுக்கப்பட்டு;உடைமைகள் பறிக்கப்பட்டு;வெறும் உடலோடு மட்டும் உயிர்ப்போடு இருக்கும் மனிதர்களுக்கான நாளாகும்.என் தாய்மொழி தமிழ்;என் தாய்நிலம் தமிழ்நாடு;என் இனம் தமிழினம்,என்னும் செருக்கு கொண்ட ஒவ்வொருவரும் தலைவனங்க வேண்டிய தலை நாளாகும்.
இப்படி மட்டும் நா எழுதி இருந்த,"நா என்னத்த பண்ணிபுட்டனு நீ இப்போ பெருமைப்பட்டுக்குறன்னேன்"னு என்னைய வெழுத்துவாங்கிருப்பாறு நம்மய்யா.
நம்ம பண்ண ஒரே நல்லது,மறதி ய மறந்து ;அவ்ளோ பெரிய தலைவர் இருந்தாருங்குற சுவடாவது வச்சுருக்கோம்ல,அது தா.மறந்துருந்தாலு அவரு கவலப்படுற ஆளில்லா.சாகுறப்போ ஒரு மனுசன் கறை படியாத ரெண்டு வேஷ்டி மட்டும் தா வச்சிருந்தார் னா,வாழ்ந்த காலத்துல என்ன ஆஸ்திய சேத்திருக்க போறாரு.தமிழ்நாட்ட கொள்ளையடுச்சு சொத்து சேத்த திருடனுங்க மத்தியில தமிழ்நாட்டையே சொத்தா நினைச்சாறு,அத மூட்டகட்ட எவ திட்டம் போட்டாலு தூக்கிப்போட்டு மிதிச்சாறு.
அவரு பள்ளிக்கூடம் கட்டுனது ,எல்லாரையும் படிக்கவச்ச கதை தா நமக்கு தெரியும்.ஆனா அப்போ அரசு கிட்ட நிதியே கிடையாது.ஆனா அதுக்காக காமராஜர் மதுக்கடைகளை ஆரம்பிக்கள,"கற்கை நன்றே கற்கை நன்றே;பிச்சை புகினும் கற்கை நன்றே னு யாருயா சொன்னது.எம் புள்ளைங்க எதுக்கு பிச்சை எடுத்து படிக்கனும்.நா போய் வீடுவீடா மடிபிச்சை எடுத்து படிக்க வச்சுக்குற"னு சொன்னாரா.ஆனா,இன்னைக்கு அவரு கட்டுன பள்ளிக்கூடங்களுக்கு கக்கூஸ் கட்ட துட்டில்ல;சத்துணவுத் திட்ட முட்டையில 1100 கோடி ரூபா ஊழல் என்னத்த சொல்ல.
"நா புடுச்ச முயலுக்கு மூணு காலு"போக்கு தா இப்போ இருக்க கரை(றை)வேட்டி காரங்ககிட்ட இருக்கு.நம்ம தலைவருமே அப்பேற்பட்ட வீம்புகாரர் தாங்க, மக்களுக்கு ஒரு நல்லதுனா அந்த திட்டத்தை எப்படியாச்சும் முடுச்சுப்புடுவாறு.
அப்படி தா ஒரு தடவ வேலூர்ல தண்ணீர் பற்றாக்குறை னு பார்வையிட போயிருக்காரு,எல்லாத்தையும் பாத்துட்டு அங்க இருந்த பொறியாளர் கிட்ட,"ஆம்பூர்ல இருந்து தண்ணிய திருப்பி விட திட்டம் போடு"னு சொல்லிருக்காரு.அதுக்கு அந்த பொறியாளர் ,"ஆம்பூர் பள்ளமான பகுதி,வேலூரோ மேட்டுப்பகுதி எப்படி நா  திட்டம் போடுறது முடியவே முடியதுங்கய்யா"னு சொல்லிருக்காரு.இதச்சொல்லவா உங்கள அரசாங்கம் வேலைக்கு வச்சிருக்குன்னேன்.திட்டத்த முடுச்சு குடுத்துட்டு தா நீர் ஊருக்கு போகமுடியும்"னு கண்டிப்பா சொல்லிட்டாரு.அந்தப் பொறியாளரு வேற வழியில்லாம திட்டம் போட்டு அடுத்த நாளே கொடுத்துட்டாரு.ஐயாவு ,"இதத் தாம்யா எதிர் பார்த்தன்னேன்.நல்ல திட்டம்.நன்றி.வாழ்த்துக்கள்."ன்உ சொன்னாரு.இந்த சம்பவத்துல மிகப்பெரும் சுவாரஸ்யமே,அந்தப் பொறியாளர் வேறு யாருமில்லை ,நம்முடைய அறிவியல் தலைவர்,ஏ. பி.ஜே. அப்துல் கலாம் அய்யா தான்.இருந்தாலும் நம்ம தெர்மாக்கோல்  விஞ்ஞானிக்கு ஈடாகமுடியாதுல!
முதுகு வலியால் அவதிக்குள்ளான அமைச்சர்கள் இருக்கும் இதே தமிழ்நாட்டுல தா,ஒரு முதலமைச்சர் தன்னிகழ்ச்சி விமர்சனம் செய்தார்னா நம்பமுடியுமா.ஒரு மேடையிலே கண்ணதாசன் இவரப் புகழ்ந்து பேசிட்டு இருந்தாரு.அப்போ,"ஆங்கிலத்தில் intelligent arrogant னு ஒரு வார்த்தை இருக்கும் அது தா காமராஜரோட அறிவுக்கு பொருத்தமான சொல்லா இருக்கும்.ஆனா ,எனக்கு அதோட தமிழாக்கம் புரிபடல"னு சொல்லிருக்காரு.அதற்க்கு தலைவர் கொஞ்சம் கூட தாமதிக்காம,"கவிஞரே!அதுக்கு தா ஆர்வக்கோளாறு னு பேரிருக்குன்னேன்."னு சொல்லி சிருச்சிருக்காரு.ஆனா இன்னைக்கு முதலமைச்சர் இல்ல,அவரு திட்டத்தை விமர்சிக்க கூட உரிமை இல்லாத ஜனநாயக கைதிகளாகிட்டோ.
அமைச்சர் பதவிக்காக கொலை கூட பண்ண யோசிக்காத இந்தக் காலம் எங்க,பிரதமராக்க நாடே தயாரா இருந்தப்போ வேணாம்னு சொல்லி விலகி இருந்த காமராஜர் எங்க!அவரோட பகுத்தறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இதோ,
ஒரு சமயம் காமராஜர் நேருவை பார்க்க போயிருந்தார்,அப்போ நேரு ரொம்ப சோகம் இருந்திருக்காரு.எத்துக்குயா அயோகம் னு இவரு கேட்டதுக்கு,"இல்ல காமராஜர்,நாம சீனப் போர்ல தோத்துட்டோ,ராணுவத்தை உடனடியா பலப்படுத்தனு,அதுக்கு ஆயுதங்கள் தேவை,அமெரிக்கா கிட்ட இருந்து தா ஆயுதங்களை வங்கனு,ஆனா நம்ம கிட்ட நிதிப்பற்றாக்குறை.அவர்களு,நிதி இல்லாம தரமாட்டோ ,வேணும்னா எங்க நாட்டுல இருக்க ஒரு வங்கி உங்களுக்கு கேரண்ட்டி கையெழுத்து போட்டு பரிசீலிக்கலாம்"னு சொன்னாங்க."அப்புறம் என்ன இதுல பிரச்சனை"னு அய்யா கேட்க."ஆனா அவங்க வங்கிகள் எதுவுமே இந்தியாவை நம்ப முன்வரல"."சரி,அவங்க வாங்கி ஏதாச்சு இங்க இருக்கா"னு காமராஜர் கேட்டிருக்கர் "ஆமா,american express bank இருக்கு"."அத மூடுங்கன்னேன்"னு ஐயா சொல்ல,நேரு திடுக்கிட்டு,"ஏதாச்சு பிரச்சனை ஆகப்போகுது"னு சொல்லுறாரு."எது வந்தாலு மே பாத்துக்குற.நீங்க மூடுங்க.நமக்கு உதவி பண்ணாத அவங்க நாட்டு வங்கி மட்டும் இங்க எதுக்கு இருக்கணும்"னு காமராஜர் சொல்ல.அவ்வழியே வாங்கி மூடப்பட,அவ்வழியே அத்துணை அமெரிக்க வங்கிகளும் கடன் கொடுக்க முன்வந்தனர்.
இதுவல்லோ,தலைமை
இதுவல்லோ,தந்திரம்
இதுவல்லோ,சாமர்த்தியம்.
அவரோட ஆட்சி தமிழ்நாட்டுல நடந்துட்டு இருந்த நேரம் ,அவரோட உதவியாளர் ஒருத்தர் வந்து,"அய்யா ,நம்ம நிறையா நல்லது பண்ணியிருக்கோ.ஆனா,அதுலா மக்களுக்கு எடுத்துச் சொல்ல விளம்பரம் பண்ணணும்யா"னு சொல்லிருக்காரு."நம்ம என்னத்த செஞ்ஜோம்னு விளம்பரம் செய்ய சொல்லுற. சரி,விளம்பரம் செஞ்சா எவ்வளவு சிலவு ஆகும்"."ஒரு 2லட்சம் வருமுங்கய்யா"னு அவரு சொல்லி முடிக்கிறதுக்குள்ள காமராஜர் எழுந்து ,"என்னது 2 லட்சமா, இவ்ளோ காசு இருந்தா எம் புள்ளைங்களுக்கு,நாலஞ்சு பள்ளிக்கூடம் கட்டிபுடுவனே.விளம்பரம் வேணா ஒரு மண்ணு வேணா வேலையப்பருங்க"னு சொல்லி இருக்காரு அந்த பெருந்தலைவர்.ஆனா,இன்னைக்கு ஓராண்டு சாதனைக்கு 1000 கோடி,ஈராண்டுக்கு ஈராயிரம் கோடினு செலவு செய்யுறாங்க.இதக் கேட்டுப்புட்டா குத்தமுன்னு குண்டர் சட்டம் போடுறாங்க.
ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர்,அய்யா கிட்ட,"எது அரசியல் யா ?"னு கேட்க."தண்ணீர் வரலனு மக்களெல்லா ரோட்டுல நின்னு போராடிக்கிட்டிருக்காங்க.அவங்கள பாக்க நா போற இதுதாம்யா அரசியல்."
உயிர்க்கொல்லியான புற்றுநோய்க் கொடுத்து ,பல வருடங்களா தண்ணீருக்கு கஷ்டப்பட வச்சு,வஞ்சனை செய்யுற ஒரு தொழிற்ச்சாலைக்கு எதிரா கிளம்பிய ஒரு கிளர்ச்சிக்கூட்டம்,பல ஆயிரம் போராளிகள் கொண்ட ஒரு கூட்டத்தை,ஜனநாயகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கு என்கிற மூடநம்பிக்கை உள்ள ஒரு கூட்டத்தை,பார்வையிட ஹெலிகாப்டரில் போயிருந்தாலும் கூட பரவால; போகாம இருந்திருந்தா கூட பரவாயில்லை.ஏதோ,நாயைக் கல்லால் அடிச்சுத் தொரத்துரது போல,துப்பாக்கிக் குண்டால் கலச்சுவிட்டிருக்காங்கய்யா.இது எதுக்குமே இன்னும் நியாயம் கிடைக்கவில்லையா,வெறும் இழப்பீட்டுத்தொகை தா அறிவிக்கப்பட்டிருக்கு.உயிரை வெறும் காகிதத் தாள் ல எடை போடுற இந்த கிருக்கணுங்கல எப்படி யா சமாளிக்க போறோம்.
தேர்தல் ல தோத்தப்போ கூட ஜனநாயகம் ஜெயிச்சிருச்சுன்னு சந்தோசப்பட்டவரு நீங்க,இப்போ இருந்திருந்திங்கனா உங்களோட கருத்துரிமை கூட நாட்டின் நலன் கருதி பரிக்கப்பட்டிருக்கும்;நீங்களும் நக்சலைட் என்னும் தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவராக முத்திரை குத்த பட்டிருப்பீர்.
நீங்க சொன்னதும் செய்ததும் தா யா அரசியல்,
உங்களைப் பிரிந்த பிரிவாற்றாமையால் உங்கள் உடல் கூடவே உடன் கட்டை ஏறியது நம் அரசியலும்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் அரசியலுக்கும்.

#பதிவுகள்

ஆதலால் காதல் செய்வீர்!
#மாயாவி

‘காதல்’ என்ற வார்த்தைக்கான சரியான புரிதல் எனக்கு இல்லையோ என்றே தோன்றுகிறது. அரைடவுசர் வயதில் 'love' என்று கூறியபோது ‘பளீர்’ என்று முதுகில் வாங்கியது இன்றளவும் நினைவில் வருகிறது. மீசை அரும்பும் பருவத்தில் அகநானூறு வகுப்புகளைத் தோழியர்(!) பக்கம் திரும்பாமலேயே கடத்தியிருக்கிறேன். காதல் கொடியது என்ற நிலைப்பாட்டோடவே பள்ளிப்பருவம் முடிந்தது. கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் எந்தவொரு கலர்ஃபுல் தேவதையும் என்னைக் கவிதையெழுதவைத்ததில்லை. காதலர்களுக்குத் தூதாகச் செல்லும் பாக்கியமும் எனக்கு வாய்த்ததில்லை. காதலானது normal physiologyயாகவே இருப்பினும், எனக்கோ அது abnormal pathologyயாகவே பட்டது. நான் காதலை எதிர்ப்பவனோ வெறுப்பவனோ அல்லன். காதற்கதைகளையும் காதற்சார்ந்த திரைப்படங்களையும் காணும்போதெல்லாம் transient புன்னகை வருவதுண்டு. ஆனால், அவையாவும் endorphinகளின் வேலையேதவிர, androgenகளுக்கு அதில் பங்கில்லை. நான் காதலிக்காத மரமா என்றால், இல்லை. என் காதல் நரம்பிற்கு ‘காதல்’ என்னும் பதம், ஓர் ஆணும் பெண்ணும் கைகோர்த்தவாறு கடற்கரை மணலில் ‘slow motion’-ல் காற்பதித்து நடப்பதுபோன்ற காட்சிக்கும், இறந்த காதலியை நினைத்து நினைத்து உருகும் தாடி வளர்த்தோ வளர்க்காமலோ ‘get up change’ பண்ணும் ‘hero’வுக்காகவுமே பயன்படுத்துவது பிடிக்காமல் இருந்திருக்கலாம். “நான் என் பெற்றோரைக் காதலிக்கிறேன்; என் படிப்பைக் காதலிக்கிறேன்; மருத்துவத்துறையைக் காதலிக்கிறேன்” என்றெல்லாம் கூறும் “good, sincere, obedient, perfect, brilliant, humble student” நானில்லை. நான் ‘அவனும்’ இல்லை. எனது neuronகள் காதலை வேறுவிதமாக சித்தரித்துவைத்துள்ளன. காதல் ஒரு மெல்லிய கனத்த உணர்வு. அது இருபால் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டது. என்னை உன்னை உந்தித்தள்ளும் பேராற்றல் அது. புன்னகை தேசத்துப் பூ அது. காதலால் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல், வரம். காதலை மனிதர்களுக்கு இடையில் நிகழும் வினை என்று மட்டும் வரையறுக்க முடியாது. நானும் காதலித்திருக்கிறேன். பலரைப் பலவற்றைப் பலவிதமாகக் காதலித்திருக்கிறேன். அவர்களுள் சிலர், மனிதர்; சிலர், மனிதர் அல்லர். துரத்தித் துரத்திக் காதலித்ததில்லை; தூரத்தில் நின்று காதலித்திருக்கிறேன். அவர்களிடம் என் காதலைச் சொன்னதில்லை. காதலை வெளிப்படுத்துவதற்கான தேவையும் வந்ததில்லை. நான்மட்டுமே சார்ந்த காதல்பற்றி உலகிற்குக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. மழையை நனையாமல் இரசிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. அப்படி இரசிக்கும்பொழுதில்தான் maturity பிறக்கிறது என்பேன். காதலுணர்வும் அப்படியே. காதலித்தேதான் ஆகவேண்டும் என்பதில்லை. ஆனால், காதலித்துப் பார்க்கலாம். ஏனெனில் காதல், எதனையும் தாண்டிப் புனிதமானது!

Friday, 13 July 2018

#கவிதைகள்

ஒரு பயணக் கதை
#கார்குழலி

ஈன்றபொழுது பத்தரை மாதத்து தங்கம்-என்று
பெமை கொண்ட தாய்
இன்று பிள்ளை மனம் கல்லோ-என்று எண்ணிணாலும்.....

மனதில் ஈரமற்ற பிள்ளையை பற்றி அவள் கொண்ட கவலையும் அளவற்ற அன்பும்
செவி கொடுத்த என் விழிகளை ஈரமாகிற்று

Thursday, 12 July 2018

#கவிதைகள்

மழை
#கழுத

சிந்தியது ஒரு துளி.
சிமிட்டவில்லை என் கண்விழி
இருந்தும் ஓரெழுத்து மணித்துளியில்
கொட்டித்தீர்த்தன  கோடிப்புள்ளிகள்
சேர்க்கப்படுமா என  ஏங்கினேன்
ஏங்காதே
சேர்ந்துவிட்டோம் என கூவின
தரை படர்ந்த ஈரம் எனும் கோலம்!

#கவிதைகள்

கௌரவப்பெண்மை:
#கழுத

தெய்வம் என்று சொல்லி பல சிலைகளை
கருவறைக்குள் வைத்துள்ளோம்

கருவறை சுமக்கும்  அன்னையை 
ஏனோ சமையலறையிலே பூட்டிவிட்டோம்

பரு முளைத்த பருவம் முதல்
கரு சுமந்த தருணம் வரை
அவள் மெய்ப்பட்ட துன்பத்தை
மெய்யாலுமே சொன்னவன் எவனோ?

பறவையாய் பறந்து
புருவமதை  உயர்த்தி
உயர்ந்தவன் என்னும் அறியாமை கொண்ட ஆணை
போர்க்களத்தில் சந்திக்க இருந்தவளை
போக்கத்தவள் என்றது சமூகம்

இன்னும் சிலரை
சீமாட்டி என்று சீலை உடுத்தி
சீர்குழைத்தது சமுகம்
தீட்டு தீட்டு என்று சொல்லியே
அவள் இதயத்திற்குள் ஈட்டியை எறிந்தனர்

பாவப்பட்ட அந்த பெண்ணினம்
இருமனம் இணையும் திருமணத்திலும் சிக்கியது

விலங்கு என நினைத்தோ அவள் மனதை
விலங்கிட்டு வனத்திற்குள் வைத்தனர்

மீட்க வந்த மாவீரன் என அவனை நினைத்தனர்
ஆனால்
ராமனையே மணந்தாலும் வனவாசம் உறுதி என்பதை
வனரோஜா மறந்தாள்.



Wednesday, 11 July 2018

#பதிவுகள்

இன்றைய மாணவர்களின் நிலை
                  கல்லூரிக்குப் பின்
#வெண்பா

கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு சுகமான அனுபவம் தான் 'பட்டாம்பூச்சி விரிந்து வருவது போல, நாம் எல்லோரும் பெற்றோரின் அரவணைப்பில் இருந்து சுதந்திரமாக வெளியே வருவது இந்த ஸ்தலம் தான்'.
நாம் யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாத வாழ்க்கையின் பல பாடங்களை இங்கு தான் கற்றுக் கொள்கிறோம்.ஆனால் கல்லூரிக்குப் பின்னால் யாராலும் தீர்மானிக்க முடியாது, நாம் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் கட்டம் இதுவென... நம் சொந்தக்காலில் நின்று வேலைக்குச் சென்று, நம் உழைப்பில் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.இன்றைய சமுதாயத்திற்கு தெரிந்த இரண்டு படிப்புகள் ஒன்று மருத்துவம்" மற்றொன்று பொறியியல்",ஆனால் இப்போதைய ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால், புதுமையாக தனித் திறன்களுக்கான
(மாத்தி யோசி) வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் என்பது தேவை இல்லை.நமக்கு அதில் அதிக திறன்கள் மட்டுமே போதுமானது.
என்ன வாழ்க்கை டா இது...என்று புலம்பும் ஐ. டி வாழ்க்கையின் பரிதாப நிலை.
வெளிநாடு செல்வது ஒரு சில வீடுகளில் நாகரீகக்கூற்றாக(fashion statement) ஆக மாறிப் போன காலம் இது. விமானத்தில் வர செலவுகள் ஆகும் எனத் தன் பெற்றோரின் கடைசி ஊர்வலத்தைக் கூட காணொளி (video)
மூலம் பார்க்கிற மகன்கள் உருவாகி வருகிற பரிதாப நிலை தான் நம் கண் முன்னே..!
இவை தான் நம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை 'பிம்பம்'.... கல்லூரிக்குப் பின் ...நிறம் மங்கிய சித்திரமாக...
திறன்களின் தேடலே வாழ்க்கையாகப்
பயணிக்கும் நிலையே நிதர்சனமாகிறது.

Tuesday, 10 July 2018

#பதிவுகள்

#4G
#மாயாவி

அறிவியலானது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அணுவையும் துளைத்துவிட்டார்கள். அதனூடே எழுகடலையும் விரைவில் புகுத்திவிடுவார்கள். 'இமாலய வளர்ச்சி' என்பதனையெல்லாம் தாண்டி இன்னதென இயம்பவியலாத் தூரம்வரை சென்றுவிட்டார்கள். எனினும், உயரச் செல்லச் செல்ல உறவுகளும் அவற்றைப் பின்னிப் பிணைக்கின்ற உணர்வுகளும் வெறும் பிம்பங்களாகவே நமக்குப் தென்படுகின்றன. தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அபரிமிதமானவை. அன்றைய கிரகாம் பெல்லின் கண்டுபிடிப்பு, இன்று சிறியதும் பெரியதுமாய் அனைவரது கைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு பக்கம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இன்னும் வளரணும் ப்ரோ! பெருந்துறையிலிருந்து பென்னிசில்வேனியாவில் வசிக்கும் மாமன் மகள் மட்டுவார்க்குழலியிடம் நொடிப்பொழுதில் பேசிவிடலாம் டூட். (அடக் கடவுளே! AIRTEL 4G பொன்னுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை). தூதனுப்பிக் காதல் வளர்த்ததெல்லாம் நலதமயந்தியோடு போய்விட்டது. இன்றைய நகுலும் தன்வியும் Whatsapp Facebook Imo Twitter Skype Hike என்று நித்தமும் காதல் காவியம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். கலகலகலவென மணியெழுப்பிய தொலைபேசிகள் இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தங்கள் அந்திம காலத்தை எண்ணி மௌனித்திருக்கின்றன. அன்று "அக்கரைல இருக்கிற அக்காவுக்கு போன் போட்டுத் தாடா கண்ணு", என்று பாட்டிமார்கள் கேட்டிருப்பார்கள். நாமும் ஸ்டைலாக ரிசீவரைக் காதில் வைத்து பட் பட்டென்று நம்பர் பேடை தட்டியிருப்போம். பீப் சத்தம்(!) வந்தவுடன் பாட்டியிடம் நீட்டியிருப்போம்.( ஹலோ துபாயா? பிரதர் மார்க் இருக்காரா? - வடிவேலு தொனியில்). இன்று அதே பாட்டி 'What's up dude?' என்று கேட்பது பரிணாம வளர்ச்சியின் பாதி நிலை. சற்று நினைத்துப்பாருங்களேன்... அப்பொழுதெல்லாம் தொலைபேசி ஓசை கேட்டவுடன் சிட்டாய்ப் பறந்திருப்போம், முதல் ஆளாய்ப்போய் எடுக்க. "கண்ணு, சித்திக்கு ஒரு  போன் போடு", என்று அம்மா சொல்லும் போதெல்லாம் நாம் சமத்தாய்ச் செயல்பட்டிருப்போம். அதுவே அம்மா திட்டியிருந்தாலோ, அப்பா கேட்ட பொருளை வாங்கித்தர மறுத்திருந்தாலோ, அருகிலிருக்கும் தொலைபேசி மணிக்கணக்காக மணியடித்தாலும் எடுத்திருக்க மாட்டோம். "அந்த ஃபோனத்தான் எடேன்டா...", என அம்மா சத்தம் போட்டால், "வந்து எடுக்கிறது?!?" என்ற பாணியில் ஹாயாக அமர்ந்திருப்போம். எத்துனை எத்துனை தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்போம்? மேலத்தெரு அண்ணாச்சி, சூரியம்பாளையத்து அத்தை, வடப்புதுப்பட்டிப் பெரியம்மா, ஆனங்கூர் ஆஸ்ப்பத்திரி என்று அனைவரது எண்களையும் நினைவில் வைத்திருப்போம். இன்றைய பொடிசுகள் தாய்தந்தையர் எண்ணைக்கூட தத்தமது i-phoneஐப் பார்த்தே கூறுகின்றன. விஞ்ஞானமாம் வளர்ச்சியாம். Two drops of tears for you guys...அப்பொழுதெல்லாம் சிலரது தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருப்போமே? தொலைபேசி ஒலி கேட்கும் போதெல்லாம் நமக்கானவர்களாக இருப்பார்களோ என்று நாணமும் அச்சமும் கொண்டு, அவை இருபாலரின் பண்பும்தான் என்று உணர்ந்திருப்போமே! இன்றோ, 'அவன்தான்டி', 'மச்சா, Call பண்ணீட்டாடா', என்று நமக்கு முன்பாகவே நமது குறிப்புகள் பிறர்க்குத் தெரிந்துவிடுகின்றன. (நன்றி: True Caller and Co). இன்று Mobile phone -ஓடு உறங்கி, அதன் முகத்திலேயே விழித்து, பல்துலக்குவதையும் படம்பிடித்துப் பிரகடனப்படுத்தி, லைக்குகளுக்காகவே பொய்யாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்று அடைமழையால் அருந்துபோன தொலைபேசி கம்பிகள் பழுதுபார்க்க வாரமே ஆனாலும் காத்திருந்தோம்; இன்றோ 3G சிக்னல் இல்லையென்றால் உலகமே பின்னோக்கி சுழல்வதுபோல் உணர்கிறோம். அன்று நமக்கான மைதானம் ஊரில் இருந்தது; இன்று Clash of clans, Pokemon Go-வாக கையளவில் சுருங்கிவிட்டது. இன்று WiFiக்கான தேடல், தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் போல் எங்கும் ஒலிக்கிறது. மொத்தத்தில் தொலைபேசிகள் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கத் தொடங்கும்போது, மனிதன் எட்ட இயலாத தூரத்தை அடைந்திருப்பான், மனம் என்பதனைக் காட்சிப்படுத்த மறந்து! நமது வாழ்வினை எளிமைப்படுத்தக் கண்டுபிடிக்கப் பட்டவை, நமது வாழ்வையே தட்டிப்பறிக்கத் துவங்கும்போது, விழித்துக்கொள்வதே நலம்!

Monday, 9 July 2018

#கவிதைகள்

தூரத்துத்தோழி
#3
#பூர்ணிமா

தூரத்துத்தோழி....
அலையெனத் தவழும்
அருவியாய் வீழும்
மலையின் காதலி
எனதருமைத் தோழி!
முகில், மஞ்சு ,மேகமென
நடமிடுவாள்,
தூரல்,சாரலென
ஊடுவாள்,
மழையெனப் பெய்து
ஆர்ப்பரிப்பாள்,
என்னிடம்
 நித்தம்  நகைத்து
சினேகிக்கும் இவள்
ரகசியக் காதலியும் கூட!
   
                     
      

#கட்டுரைகள்

                        அனாதைகள்
                  சமுகப் பிரச்சனைகள் மக்களின் சமுக கண்ணோட்டங்களை பலவாறக
விழிப்படையச் செய்துள்ளன பல்லாண்டு காலங்கள் தொட்டு இன்று வரை மனிதம்  தம்மைச் சீர்ப்படுத்தி வந்துள்ளது.இருந்தும்  பலவாறான நிகழ்வுகளில் தாமே  இழிவுசெய்தும் இன்புறுகிறது.விதியின் சதியால் சமுகத்தில் துட்சமாக தூக்கி  எறியப்பட்ட 
அன்பை நாடும் நெஞ்சங்களின் வண்ணங்களுக்காக. ஒரு சில வரிகள் இதோ....!

துவக்கம்:உலக நாகரீகங்கள் துவங்கிய காலம் தொட்டே இந்நிகழ்வு கண்ணெதிரே 
அரங்கேறி தான் வந்துள்ளது.பெற்றோருடன் வாழ இயலாமல் வாழ்க்கை ஓட்டத்தில் 
பிரிந்து துன்புற்று வாழும்(நிலை தடுமாறி) நிலையில் ஒருவன் அனாதை  ஆகின்றான்.
இந்நிலையை வாழ்க்கை தரும் பாடமென எண்ணி உயர்வோர் சிலர்,இப்பேரலையில்
தொலைந்தோரே! பலர்.

கண்ணெதிரே:இரண்டாம் உலக யுத்தத்தின் போதும்;உயிர்க்கொல்லி நோய்களின்
போதும்;எதிர்பாரா விபத்துகளின் போதும்;கொலைகார குணம் கொண்ட வெறி
கொண்ட மிருகங்களாலும் கண்ணெதிரே கண்ணீராய்,நிலை குலைந்த ,வாழ்வை
இழந்த நெஞ்சங்கள் ஏராளம்.தனி மனித வெறியால்,இரண்டாம் உலக யுத்தத்தின்
போது ஜெர்மனி,இத்தாலி.,ஜப்பான்  முதலிய தேசங்கள் அனாதைகளின்,
கண்ணீரால் நனைந்ததை யாரும்  இன்றளவும் மறவீர்!

வைரங்கள்:இயற்கையால் புறக்கணிக்கப்பட்டோருக்கு மனவலிமையே
துணை. துன்பம் துறத்தினாலும் உலகையே தன் பக்கம் சில காலம் திரும்பி
பார்க்க வைத்த உலகத்தின் பெறும் தத்துவதத்துவஞானிகளான நெல்சன் மண்டேலாஆண்ட்ரு ஜாக்சன்,மோசஸ் மற்றும் பலரும் கடந்து பாதைகள்  நம் 
வாழ்க்கையின் தேடல்கள்.

நேசக்கரங்கள்:மதம் பிடிக்காத மதம் படித்த யாவரும், குறைகளைக் கண்டு
எவரையும் ஒதுக்கியது கிடையாது.மதங்களும் இலக்கியங்களும் கூட
இதையே போதித்து வருகிறது.திருக்குரான்,பைபிள் முதலிய சமய
இலக்கியங்களில் உள்ள வசனங்கள் கூட இவற்றிற்கு சான்று.
அவற்றுள் சில,அனாதை மற்றும் விதவைகள்  அடிமை கொள்ள
எவருக்கும் உரிமையில்லை-குரான்;ஆதரவற்றோரின் அடைக்களம் நானே!-பைபிள்.

மாற்றம் தேவை:இன்று உலகம்  முழுவதும்13,000,000 பேரும்,இந்தியாவில் 6500 பேரும் 
6.5%  மக்களும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.லியோ டால்ஸ்டாய்,சின்ட்ரல்லா
,மரர்லின்  மன்ரோ நாமறிந்த மகத்தான மனிதர்கள்,இவர்களல்லலாது இன்னும் 
வாய்ப்புகள் கிடைக்காத,உள்ளங்கள் நம்மிடையே உள்ளனர்.அவர்களுக்காக
உதவ மனம் கொள்வோம்.உதவும் வலிமை இருந்தும் உதவாமல்
இருப்பதும் குற்றமே..!உணர்வு கொள்வோம் உந்துதளய் 
இருக்க முயல்வோம்...!
                                                                        

Sunday, 8 July 2018

#கவிதைகள்


 #1
# மரு.சித்தார்த்தன், எம்.டி, மருந்தியல்துறை.


துயில் முடிந்து எழுந்தால்
மீண்டும் தேனியா என்பதை விட
அதே தேனி என்பதில்
சலிப்பு வருகிறது
தன் கடன் முடித்து
பெற்ற கடன் தீர்த்து
வளர்த்த கடன் கடந்து
பேருந்தில் தேனிக்கு செல்கையில்
தோன்றுகிறது
தேனீக்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை....

நோக்கம்

அரசு தேனி மருத்துவக்கல்லூரி   தமிழ் மன்றம்
நோக்கம்: 
                    நம் கல்லூரித் தோழமைகளின் மொழித் தேடலுக்கான ஒரு களம்.
ஒரு ஊடகம் வழி எங்கள் மாணவர்களின் திறமைகளும், சமூகக் கருத்துக்களும் சமூகம் சென்றடையுமெனில், இந்த வலைதளப் பக்கம் எங்கள் மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மாணவத்தோழமைகளின் மொழி ஆளுமையின் பிரதிபலிப்பாக இயங்கும்.



          வாழ்ந்திடு...!

                             உழைத்திடு...!!
                                               படைத்திடு...!!!
    

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...