Friday, 20 July 2018

#பதிவுகள்

கவையாகிக் கொம்பாகி...
#மாயாவி

             அங்கோர் பூக்களற்ற குல்மொஹர் மரம் சாலையோர நடைபாதையில் வளர்ந்திருந்தது. கருகருவென வைரம்பாய்ந்த அடிமரம் பெற்றிருந்தது அது. அடரப் படர்ந்திருந்த அதன் கிளைகள் சாலையில் செல்வோருக்குக் குளிர்நிழலைக் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. கைமாறு எதிர்ப்பார்க்காத பேருதவி அது. கடந்த பங்குனி வெயிலுக்கு செந்நிறப் பூக்கள் மரம் நெடுகச் செறிந்திருந்தன. உதிர்ந்த பூக்கள் கொதிக்கும் தார்சாலைக்குச் சிவப்புக் கம்பளம் பூசிச் சூடுதணித்திருந்தன. இந்த ஆனி மாதத்தில் அவ்வளவு வெயிலும் இல்லை: பூக்களும் இல்லை. பதிலாக, பழுப்புநிற இலைகள் அம்மரத்திற்கு புதுவண்ணம் பூசியிருந்தன. சாலைக்கு அந்தப் பக்கமாக ஒரு வானளார்ந்தக் கட்டிடம் பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் கம்பீரமாய் வீற்றிருந்தது. சாலையையும் அந்த வானடையக் காத்திருக்கும் கட்டிடத்தையும் மஞ்சள்நிறச் சுவரொன்று பிரித்திருந்தது.
 அம்மரமும்  அந்தக் கட்டிடத்தைச் சாலையிலிருந்து பிரிப்பதில் தன்னாலானவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. அதற்குத் தண்டனையாகக் சுவரைத் தாண்டிக் கட்டிடத்தை எதிர்க்கத் துணிந்த அதன் ஒருசில கிளைகளை வெட்டியிருந்தார்கள். வேர்களை மறந்துவிட்டனர் போலும்! நகரமுடியாத, குரல்கொடுக்கவும் முடியாத அம்மரத்தால் படர்தலைத்தவிர வேறு என்ன செய்துவிட முடியும்? அம்மரத்தினடியில் நாற்பது வயதையொத்த பெண்மணி ஒருவர் தரையில் கிழிசல்கண்ட கம்பளமொன்றை விரித்திருந்தார். அதன்மீது வெம்பிய மாம்பழக்குவியலும் அம்மரத்தின் காய்ந்த சருகுகளும் பரப்பப்பட்டிருந்தன. சாலையில் செல்வோர் யாரும் மாம்பழம் வாங்கியதாகத் தெரியவில்லை. அப்பெண்மணியையும் மாம்பழங்களையும் ஏறெடுத்தும் காணவியலாத அவசரத்தில் மக்கள் விரைந்து கொண்டிருந்தனர். அப்பெண்மணி யாரையும் கூவி அழைக்கவுமில்லை. அம்மரம் மட்டும் தன் நிழல்கொண்டு அப்பெண்மணிக்கு உதவிக்கொண்டிருந்தது. தூரத்திலிருந்து ஓர் உயர்ரக மகிழுந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு சாலையில் விரைந்தது. அது உமிழ்ந்த புகை, காற்றுக்குக் கருநிறம் பூசியது. அதன் வேகத்தில் அம்மரக்கிளைகளுள்சில பயந்துபோய்க் காற்றோடு ஓடிவிட எத்தனித்தன. மரம் அவை தப்பிவிடாது இழுத்து வைத்துக்கொண்டது. கரியை வெளியிடுவதில் வாகனங்கள் வேறுபடுவதில்லை. வேற்றுமை, அவ்வாகனங்களின் தோற்றத்திலும் அவ்வாகனங்களை இயக்குவோரிடத்தில் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் அம்மரம் கண்டுகொள்ளவில்லை. எப்பொழுதும்போல் பழுத்த இலைகளுள் சிலவற்றை புன்னகையின் சின்னமாய் உதிர்த்துக்கொண்டிருந்தது அம்மரம். அந்த மரத்தில் பறவைக்கூடுகள் எதுவும் தென்படவில்லை. பறவைகளை அக்கட்டிடத்தின் உரிமையாளர்கள் விரட்டியிருந்தார்கள். பயம்கொண்ட பறவைகளும் பறந்திருந்தன. பறந்துசென்ற பறவைகளையெண்ணி அம்மரம் வருத்தம்கொள்ளவில்லை. மரத்தால் பறக்கமுடியாத காரணததால் மரம் பறக்கவில்லை; அவ்வளவுதான். பொழுதுசாயத் தொடங்கியது. பெண்மணி, கடையைச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில்  நீருண்ட மேகங்கள் வானைச் சூழ்ந்துகொண்டன. அம்மேகங்களுக்கும் அக்கட்டிடம் வானை எட்டுவதில் உடன்பாடு இல்லைபோலும். நீலவானை ஒளித்து வைக்க நினைத்து அவை கருநிற அரிதாரம் பூசிக்கொண்டன. கார்முகிலிலிருந்து மண்ணோக்கிப் பாய்ந்த முதற்துளி, தார்சாலையில் விழுந்து மறைந்தது. அதனைத் தொடர்ந்து கனமழை கொட்டத்தொடங்கியது. அம்மழையில் குல்மொஹர் மரத்தின் பழுத்த இலைகள் அடித்துச் செல்லப்பட்டன. எதையும் பொருட்படுத்தாத அம்மரமும் புன்னகையை வெளிப்படுத்த  இலைகளற்று நாளைய தினத்தை எதிர்கொள்ளத் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருந்தது

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...