Sunday, 7 October 2018

தலையங்கம்

#309
#வினோதினி
#மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்
எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறையின் விளக்க அறைக்குச் சென்றுசேர்ந்தேன்.எப்பொழுத்தும்போல்,எனக்கு முன்னே சென்றவர்கள்,சீனியர் உட்கார்ந்தது போக மீதமிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.வழக்கம்போல்,2 மணி நேர;ஒன்றும் புரியாத வகுப்பில்,என் நில் நெடு பயணம் தொடங்கியது.முடிந்ததும்,அனைவரும் வெளி நோயாளிகள் அறைக்குச் சென்றோம்.அங்கு,மருத்துவரின் சில குறிப்புகள் என் மூளையில் ஏறும்;பலவற்றை நானே வழிமறித்துவிடுவேன்.அப்போது,ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அவ்வறைக்குள் நுழைந்தார்.அவரைச் சோதனை செய்யுமாறு மருத்துவர் பணித்தார்.அதன்படியே,அறைக்குள் கூடிச் சென்று,அவரின் மார்பகத்தை சோதனை செய்தோம்.முழுவதுமாக முற்றிப்போயிருந்த நிலையில் இருந்தது அவர்களின் மார்பகப்புற்றுநோய்.நான் இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவி;அவங்க நோயை ஆராய்ந்து கற்றுக்கொள்ள தான் பார்க்கிறேன் என்பதை அறியாத அந்த பாட்டி, நான் வெள்ளைக் கோர்ட்டும் ஸ்டெதாஸ்கோபும் போட்டிருக்கும் ஒரே காரணத்தினாலேயே என்னை மருத்துவர் என நம்பி,என் கையைப் பிடித்து,"எ மவனு மருமகளு இறந்துட்டாங்க,பேரப்புள்ளைங்களை நா தாயா காப்பாத்தனு.எப்படியாச்சு என்ன பொழைக்கவச்சுடுயா"னு கண்ணீர் விட்டப்போ,மனச கல்லாக்கிக்கிட்டு அவங்கள கட்டிப்பிடிச்சு,"ஒன்னு இல்ல பாட்டி,நாளைக்கே வீட்டுக்கு போய்டலாம்"னு சொன்னேன்.அந்தப் பாட்டியிடம் ஒரு மாணவியாக நான் கற்றுக்கொண்டதை விடவும்,ஒரு பேத்தியாக நிறைய யோசனை செய்ய வைத்தார்கள்.
முன்பு,சிகரெட்டும் புகையிலையும் பயன்படுத்தியவர்களுக்கு வந்த புற்றுநோய் இன்று தன் நிலைப்பாட்டை மாற்றி சின்ன குழந்தையிடமும் புகுந்துகொள்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு,கருத்தாள் எனும் என் பாட்டி,மார்பகத்தில் சிறு கட்டி இருப்பதை அவராகவே கண்டறிந்தார்.உடனே,மதுரைக்குச் சென்று பரிசோதித்தோம்.வேண்டிய அத்தனை தெய்வங்களில் எதன் கருணையோ,அது வெறும் நீர்க்கட்டி என்று முடிவு வந்தது;எங்களுக்கு உயிரும் வந்தது.
அதை நினைத்து மகிழ்ந்திருந்த பொழுது,சில மாதங்கள் கழித்து என் தாய்மாமாவிற்கு வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டது.அவர் மருந்தகம் வைத்திருந்ததால் என்னவோ அதனை முன்னமே கண்டறிந்துவிட்டார்.ஆயினும்,என் அம்மாவின் அழுகை தேங்கவில்லை,உயிருக்கு ஆபத்தில்லை என்றபோதும்,புற்றுநோய் என்னும் வார்த்தையே அவர்களை பயமுடுத்தியது.எனது மாமா குணமாகிவிட்ட நிலையிலும்,அவர் அந்த சிகிச்சைக்காய் அனுபவித்த வேதனைகள் சொல்லிமாலாது.இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்.
இன்றோ,புற்றுநோய் மிகச் சாதாரணம்.அதிலும் மார்பகப் புற்றுநோயோ,பெண்களின் வலிகள் என்று சொல்லப்படும் மாதவிடாய்,பிரசவம் போன்றவற்றோடு சேர்க்கப்பட்டுவிட்டது.அது பெண்களின் பொது நோயான பிறகும்,மார்பகத்தை மருத்துவரிடம் காண்பிப்பதற்கு தயக்கமும் கூச்சமும் இன்றளவும் பெண்களிடம் உள்ளது.நம் கணவனுக்கு மட்டுமே நாம் சொந்தம் ,வேறு யாராவது மார்பை பார்த்துவிட்டால் கற்பு பறிபோகும் என பயம்கொள்கிறார்கள்;உயிரைப் பற்றிய பயம் சிறிதும் இன்றி.
மருத்துவர்களான எங்களுக்கு உடலின் அனைத்து இடங்களும் உறுப்புகளே;ஆண் பெண் வேறுபாடின்றி இருவரின் பிறப்புறுப்புகளையும் நாங்கள் சோதனை செய்ய வேண்டும்;அதில் நாங்கள் கூச்சம் கொண்டால்,நோயை நாங்களே அனுமதிப்பதற்கு ஈடாகும்.கை கால்களைப் போல அதுவும் ஒரு உறுப்பு தான்.

Friday, 31 August 2018

#பதிவுகள்

#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி


தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களை செய்யாதே ;
அத்தகைய சொர்களை சொல்லாதே ; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே தமிழருடைய ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல் செய்யல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவை அற்றுஇருந்திலும் பின்னவை போற்று.

கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நம்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களை விட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.
தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல. இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஆகவே, இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கருது. ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை என்று பாரதியார் கண்ட கனவை போற்று. வரியவர்கைகளைக் காணும் போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுதில் கண்ணை மூடி, இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலைகளிடம் உழைப்பால் ஆனது என்று எண்ணு.  வாரத்திரற்கு ஒரு நாளெனும் நீ வாழும் வீடு ஏழைத்தொழிலகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு.  நீ உடுக்கும் உடை முதலினும் ஏழைத்தொழிலைகளின் உழைப்பால் ஆனது என எண்ணு. அந்த ஏழை குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப் போல உண்ண முடியவில்லை என்பதையும், உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் என்னு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்திருகு. இன்றைய எண்ணமே வருங்கால அமைப்புக்கு வித்து. ஆகையால் உண்ணுவதால் பயனுண்டு என்று நம்பிக்கையோடு எண்ணு

*so long as the millions live in hunger and ignorance,I hold every man a traitor who,having been educated at their expense,pays not the least heed to them.*விவேகானந்தரின் இந்தமணிமொழியை மறவாதே.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற நல்ல நிலை வரவேண்டும்,உலகம் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால்,நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்துக்கொள். அதுவரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே.ஊருக்கெல்லாம் போதுக்காவல் சிறந்த முறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம்தம் வீட்டைத் தாளிட்டு காத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?அதுபோல உலகத்திற்கு பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக்கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றி அமையாத கடமை என்று உணர்ந்துக் கொள்.

உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம் உயர்வு மானம் ஆகியவற்றை நாட்டிற்காக விட்டுக்கொடு.

தலைமை உன்னை தேடிக் கொண்டு வந்தால் வரட்டும்; நீ அதை தேடிக்கொண்டு போய் அலையாதே. நீ தேட வேண்டியது தொண்டு. தலைமை தாக்குவதும் ஒரு வகை தொண்டு தான். தன்னலம் அற்றவற்கு அது பொறுப்பும் சிக்கலும் மிகுந்த தொண்டு. அத்தகைய தலைமை பொறுப்பு எப்போதாவது உன்னை நாடி வந்தால் ஏற்றுக்கொள். ஆனால் தொண்டுக்கு முந்தி தலைமைக்கு பிந்தி என்பது உன் நெறியாக இருக்கட்டும்.

Wednesday, 29 August 2018

தலையங்கம்

தமிழக ஊர்களின் சிறப்புகள்

                தேனி

#நிலா,
        உலகையே சுற்றி திரிந்து கொண்டிருக்கும் நான் கண்ட அதிசய, அழகிய மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு சிறந்த மாவட்டத்தைப் பற்றி கூறுகிறேன்.
              "அன்பும் பண்பும் வளமும் செழிப்பும்
              கொண்டு எழில் மிகுந்த இடமாக திகழும்
              இயற்கையின் குழந்தை என்று அழைக்கப்படும்
              தேனியின் அருமை பெருமைகளை காண்போம்"
சீரும் கங்கையை சீசாவில் அடைக்க நினைக்கும் செப்படி வித்தைக்காரனைப் போல, தேனி மாவட்ட அருமை பெருமைகளை சில பக்கங்களில் நிரப்ப முயற்சிக்கிறேன்.
            " இது ஒரு சுரங்கம். தோண்ட தோண்ட தொடர்கிறது
              இது ஒரு சாரகம். தேட தேட விரிவடைகிறது.....
              கண்ணகி கோட்டம் முதல் சின்னமனூர் செப்பேடுகள் வரை
              சமணமலை முதல் மேகமலை வரை ...ஆயிரமாயிரம் உண்டு.
தோற்றம்:
            1996 வரை தன் எழில்மிகு செழிப்பை மதுரையினுள் அடக்கி,1997 -இல் எரிமலையாய் வெடித்து மதுரையிலிருந்து பிளவுப்பட்டு அதன் வளத்தையும் பெருமையையும் காட்டத் தொடங்கியது.
           இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திரும்பிய  திசையெங்கும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மலைகள் தான்.
        ' உயிரற்ற கல்லும் மலையும்  கண் சிமிட்டி  பார்க்கும்அளவிற்கு பச்சை பசேலென்று நிலங்களும் ,பயிர்களும்,அக்கல்லும் மலையும் எழுந்து நடமாடும் அளவிற்கு பற்பல இசைகளைக் கொண்ட இயற்கையான தூய்மையான காற்றும் 'இவ்விடத்தின் அதிசய சிறப்பு.
பெயர்க்காரணம்:
             தேனியில் தற்போது உள்ள " நேரு சிலை"அமைந்துள்ள இடம், அந்த காலத்தில் " முக்கூட்டுச் சாலை " எனப்பட்டது.இவையே இவ்வூருக்கு தேனி என பெயர்சூட்டக் காரணம்.
           அந்த முக்கூட்டு சாலையில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அருகில் உள்ள  சந்தைக்கு வரும் விவசாயிகள் ஓய்வு எடுக்கும் இடமான அம்மரம் விளங்கியது.
   தூரத்தில் இருந்துப் பார்க்க அவ்விடம் கூட்டமான தேனீக்கள் மொய்ப்பது போல தெரியுமாம். இதனால்" தேனி "என்றழைக்கப்பட்டது.
தேனிக்குச் சிறப்பான அதன் இயற்கை அமைப்பு:
           நம் அனைவரின் மனதை நிம்மதியக்கும் வகையில் இயற்கை வளமும் , பசுமையும் மேற்கு தொடர்ச்சி மலையும் மற்றும் இயற்கையின் வனப்பும் செழிப்பும் அடடே! என்ன ஒரு அழகு.
        முல்லைப் பெரியாறு அணை , மஞ்சளாறு அணை, சொத்துப்பாறை அணை, வைகை அணை, சண்முகாநதி அணை என நீர் வளம் நிறைந்த பகுதி.
        இத்தகைய இயற்கை அமைப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கும் தென்மேற்குப் பருவகாற்றும், வடகிழக்குப் பருவகாற்றும், அதோடு மட்டுமல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் நம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் முல்லை பெரியாறும்,வைகை ஆறும் பாய்ந்து செழிப்பினை மென்மேலும் அதிகரித்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தேனியின் வேளாண்மை பற்றி சிறிதளவு:
           வேளாண்மை என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் விவசாயிகளே. "நிலம் ,நீர் ,காற்று "இவையனைத்தும் நம் வாழ்வின் ஆதாரமாக விளங்குவது போல,விவசாயிகளும் நம் வாழ்வின் முக்கிய ஆதாரங்களே.
     " அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை "என்று கூட நாம் சொல்லலாம். தேனியின் இத்தகைய பெருமைக்கும் ,செழிப்பிற்கும் ,வளத்திற்கும்  முக்கிய காரணமும் இவர்களே.
தமிழகத்தின் 50 % உணவு தேவைகளை பூர்த்தி செய்வது நம் தேனியே. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா, உலகம் முழுவதும் தேனியின் பெருமை பரவியுள்ளது.
' நெல்,கரும்பு, திராட்சை, காலிப்பிளவர்,முட்டைகோஸ், பீட்ருட், கேரட் ,முள்ளங்கி போன்றவற்றையும்
   பருத்தி, சோளம், கேழ்வரகு, முந்திரி, பயறுவிதைகள்,தென்னை, பலா, வாழை, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, கருப்பு திராட்சை ஆகியவற்றை சென்னை, மதுரை மற்றும் பல அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
             டெல்டாவுக்கு அடுத்து நெல் விளையும் பகுதி நம்' கம்பம் பள்ளத்தாக்கு' அவை நம் முல்லை பெரியாறு பாசனத்திலே.பல ஊர்களின் காய்கறிச் சந்தைகளிலும் உள்ள ஒவ்வொரு விளைபொருளுக்கும் தொப்புள் கொடியாக கம்பம் பள்ளத்தாக்கு விளங்குகிறது.
            நம் ஊர்களில் கிடைக்கும் இனிப்பான திராட்சையின் பிறப்பிடமும்நம் தேனியே. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது 'கரும்பு' ,அத்தகைய சுவை மிகுந்த கரும்பினை பெரும்பாலும் அளிப்பது சின்னமனூர், பெரியகுளம்.
      வெளிநாடுகளுக்கு பறக்கும் சின்னமனூர் வெற்றிலைக்கு தனிச் சிறப்பு உண்டு.
போடிநாயக்கனூர் என்றவுடன் நம் அனைவரின் நெஞ்சத்திலும் நீங்கா இடத்தைப் இடத்தை பிடிப்பது 'ஏலக்காய் தான்'.
                         " தேனி என்றாலே மனக்கும் ஏலக்காய் தானே" அடடே!
     அங்கு சாகுபடி செய்யப்படும் இலவச பஞ்சும் ,இவ்விடத்திற்கு தனி மவுசினை சேர்க்கிறது.
     சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் பஞ்சுகள் மென்மையான மெ த்தைகள் செய்யப்பட்டு காஷ்மீர், ஊட்டி, சீனா, நேபாளம் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
       ஆனால் இதனைப் பொறுக்காத அரசு" நியூட்ரினோ" என்ற திட்டத்தை கொண்டு விவசாய நிலங்களையும், இயற்கையின் செழிப்பையும் அழிக்க முன்வந்துள்ளனர்......
                                                                                  _ தேனியின் சிறப்புகள் தொடரும்...


Monday, 20 August 2018

#பதிவுகள்

#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி


தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது.தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆனால்தவிர, தமிழுக்கும் எதிர்காலம் இல்லை என நம்பு.ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும்.கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்கவேண்டும்.குறைகள் பல இருக்கலாம்.குறைகளுக்காகத் தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்க வேண்டும் என்று உணர்ந்திடு.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது.உன்னால் ஆனவரையில் செய், கடிதம்,மணியார்டர்,விளம்பரப்பலகை ,விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக.(மராத்தியர், குஜராத்தியர் முதலானவர்களிடம் இந்த வழக்கம் உள்ளது.)இவற்றை தமிழில் எழுதினால்,தபால்காரர், வியாபாரிகள்,வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும்.இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும்.நீ யாருடனும் தமிழிலே பேசு.(உலகத்தார் எல்லாரும் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகின்றார்கள்.)தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேசு.திருமணம், வழிபாடு முதலிவற்றைத் தமிழில் நடத்து.

சாதி, சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்;மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'என்ற செம்மொழியைப் போற்று.

நான்குபேர் சேர்ந்தால்,அவர்களிடையே பண்பாலும்  செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றும்மையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.ஒற்றுமையான  பகுதிகளை மட்டும் எடுத்துப் பேசு.வேற்றுமைப் பகுதிகள் இங்கு இப்போது வேண்டியதில்லை என்று விட்டுவிடு.வேற்றுமைப் பகுதிகளை வலியுறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது என்று நம்பு.

வெளிநாட்டுத் துணியை விலக்குதல் போல்,தமிழநாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு.நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே.உன் காசு அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள்.நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக்கடை,துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறுது கூடுதலாக இருந்தாலும் வேறு குறை இருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு.அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ தவறு நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. அதற்குத் தண்டனையாக ஓர் அணா அல்லது இரண்டணா தனியே எடுத்து வைத்துச் சேர்த்து ஒரு சங்கத்திற்கு கொடுத்து விடு.கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.

உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் நாட்டையும் மொழியையும் தூற்றாதே;பழிக்காதே; வெறுக்காதே.அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமல் நம் தாயினிடம் அன்பு செலுத்தமுடியும்.அத்தகைய அன்பு தான் நிலையானது;நீடிப்பது.மற்றவர்களின் அமைப்புக்களையும் நிலையங்களையும் விலக்குதல் என்றால்,அவர்களை வெறிப்பதும் பழிப்பதும் பகைப்பதும் வேண்டாம்.ஏன் என்றால் வெறுத்தல், பழித்தல், பகைத்தல் இவைகள், உடையவனைக் கெடுக்கும் பண்புகள்;

இவை சேர்ந்தாரைக்கொல்லி என்று திருவள்ளுவரால் கூறப்படுவது போன்றவை.இன்று அயலாரிடம் செலுத்தும் வெறுப்பும் பழியும் பகையும் அவர்கள் வாளா இருந்தால், நாளை திரும்பிவந்து நம்மவரிடையே செலுத்தத் தூண்டும்.இறுதியில் நம்மவரையே வெறுக்கவும் பழிக்கவும் பகைக்கவும் முனைவோம்.ஆகவே தற்காப்புப்  பண்புகளாகிய அன்பு பற்று கடமையுணர்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வோம்;தன் அழிவுத் தன்மைகளாகிய வெறுத்தல் பழித்தல் பகைத்தல் ஆகியவற்றை விட்டொழிப்போம்.

Saturday, 18 August 2018

தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை

#கழுத

சிசு மரணம்:
           ஒரு 30,40 வருடங்களுக்கு முன்பு பெண் சிசுக்கொலை நம் நாட்டை பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.அதிலிருந்து பக்குவமாக விடுபட்டு விட்டோம்.ஆனால் இன்று சிசுக்களின் இயற்கை மரணத்தால் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கிறோம்.
         உலக அளவில் நிகழும் சிசுக்களின் இறப்பில் கால் பங்கு இறப்புகள் இந்தியாவில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.
         முக்கியமாக சிசு இறப்பு சதவீதம் அதிகம் வைத்துள்ள மாநிலங்கள்
             உத்திர பிரதேசம்
             மத்திய பிரதேசம் 
             ராஜஸ்தான்
             பீஹார்   
              உத்திர பிரதேசத்தில் சென்ற ஆண்டில் மட்டும் 60,000 சிசுக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
                சிகிச்சை பெறும் 1000 குழந்தைகளில் 45 குழந்தைகள் இறந்துவிடுகின்றன.
               இயற்கையாகவே இத்தனை குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும் நிலையில் கோரக்பூரில் சென்ற வருடம் நிகழ்ந்த சம்பவம் நிலைகுலைய வைப்பதுவே.
            60 குழந்தைகளில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் இறந்துபோயுள்ளனர்.
             சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்திடம் வைத்திருந்த நிலுவைத்தொகையே(60 லட்சம்) இந்த உயிரப்புகளுக்கான காரணமாம்.
              உயிர்காக்கும் கருவிகளுக்கான பணத்தை கூட செலுத்த முடியாத நிதி நெருக்கடியிலா அரசு இருந்திருக்கும்.நிச்சயம் இல்லை. 
       "உயிர் தானே என்ற ஏளனமா?" இல்லை
         "தன் உயிர்க்கு இடர் இல்லை என்ற மெத்தனமா?"
          உயர் மருத்துவச் சிகிச்சைகள் வேண்டாம்;அடிப்படைத் தேவைகள் கூடவா அலட்சியம் செய்யப்பட வேண்டும்.
           பிறகு எதற்காக வரி செலுத்துகிறோம்?
தனி மனித தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே ஒரு நாடு வல்லரசைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
         ராக்கெட் விட்டால் என்ன? போர்க்கப்பல் வாங்கினால் என்ன? சுவரில்லாமல் சித்திரம் ஏது?

மருத்துவக் காப்பீடு :

          காப்பீடு என்பது  எதிர்பாராத வகையில் நிகழும் அசம்பாவித சம்பவங்களுக்கான முன்னெச்சரிக்கை ஆகும்.
           வாகனங்கள் போன்ற பலவற்றிற்கும் காப்பீடு உண்டு.அதேபோல் மருத்துவ காப்பீட்டுத்திட்டமும் உருவாக்கப்பட்டது.இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சியில் "ராஸ்ட்ரிய ஸ்வஸ்தா பிமா யோஜ்னா" என்ற காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.அதன் மூலம் ஒரு நபர் அதிகபட்சம் 30,000 ரூபாய் வரையிலும் காப்பீடு பெறலாம், மாதமாதம் காப்பீட்டுக் கட்டணமாக ரூபாய் 30 செலுத்த வேண்டும்.
        இதன் பயன் முழுவதுமாக பொதுமக்களைச் சென்றடையவில்லை.இதனை தற்போது விரிவுபடுத்தி தற்போது "மோடிகேர்" என்ற பெயரில் பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
        இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்களும் 50 கோடி மக்களும் பயன் பெறுவர்.இதன் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5,00,000 தோராயமாக பார்த்தால் 40 சதவீதம் இந்தியர்கள், வருமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பயன் பெறுவார்களாம்.இந்தக் காப்பீட்டுத் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும் மீதி உள்ளவற்றை மநில அரசுகள் செலுத்துமாம்.இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 50,000 கோடி ரூபாய்.
       இந்தத் திட்டத்தை அலசிபௌ பார்த்தால் அமெரிக்காவின் "ஒபாமா கேர்" திட்டத்தோடு மிகச் சரியாய்  பொருந்தும்.
         அந்த திட்டத்திற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே...அந்த திட்டத்தில் ஒபாமா 2.6 கோடி மக்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கினார்.அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கே 3 கோடி மக்களின் மருத்துவச் செலவிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் என்றால் நமது 50 கோடி மக்களுக்கான 50,000 கோடி ரூபாயை சந்தேகக் கண்ணுடனே பார்க்க வேண்டி உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,ராஜஸ்தான், கோவா,குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு என்று தனியாக காப்பீட்டுத்திட்டங்கள் வைத்துள்ளன.
       அப்படியிருக்கையில், அந்த மாநிலங்கள் சொந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமா,இல்லை "மோடிகேர்" திட்டத்திற்கு நிதி ஒதுக்குமா.
               இரண்டிற்கும் ஒதுக்க வேண்டுமெனில் ,தமிழ் நாட்டில் தெருதோரும் மதுபானக் கடைகள் திறந்தால் மட்டுமே அது சாத்தியம்.
                எந்த வித காப்பீட்டுத் திட்டமும் இல்லாத மாநிலங்களான
                மத்திய பிரதேசம்
                ஹரியானா
                நாகலாந்து
                சிக்கிம்     போன்ற மாநிலங்களுக்கு பலன் கிடைக்குமா என்றால் மேற்சொன்ன மாநிலங்களில் மருத்துவமனைகளே இல்லாத நிலையில் காப்பீடு எங்கிருந்து வரும்.
           மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமான ஒன்று.ஸ்கேன் எடுப்பதற்கு கூட இந்தக் காப்பீட்டை மட்டுமே நம்பி பலர் உள்ளனர்.அவர்களின் நம்பிக்கைக்கு ஒளி ஏற்றி வைப்பதே அரசின் கடமையாகும்.ஒளியேற்றாவிட்டாலும் பரவாயில்லை; குருடனாக்கிவிடாதீர்கள்!!!

                   

Wednesday, 15 August 2018

#தலையங்கம்

தமிழகத்தின் தனித்துவங்கள்

கல்லணை  , கல்லும் களிமண்ணும் சேர்ந்ததே.........
     கி.பி   2- ம்  நூற்றாண்டில் கரிகால சோழனால் திருச்சியில் அகண்ட காவிரியின் குறுக்கே உலகின் மிக பழமையான, இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் கல்லணை கட்டப்பட்டது......
அமைந்துள்ள இடம்:
                திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை அமைந்துள்ளது.காவிரி ஆறானது முக்கொம்பில் கொள்ளிடம் மற்றும் கவிரியாக பிரிகிறது.கவிரியானது மீண்டும் உள்ளாறு, காவிரி,வெண்ணாறு,புது ஆறு என பிரிகிறது.உள்ளாறு மீண்டும் கொள்ளிட்டத்துடன் இணைகிறது.இந்த இடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டிருக்கிறது.வெள்ளத்தின் போது நீரானது கொள்ளிடத்திலும், பாசனகாலத்தில் காவிரி, வெண்ணாறு, புது ஆறிலும் திறந்து விடப்படுகிறது.இதனால் பல லட்சம் எக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்திலிருந்து  காப்பாற்றப்படுகின்றன......
உருவான வரலாறு:
                  பிற்கால சோழன் கரிகாலன் மழைக்காலத்தில் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிவதையும் வெயில் காலத்தில் வறட்சி நிலவுவதையும் கண்டு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்தான்.இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது  எளிதானதல்ல. அதற்கும் வழியை கண்டுபிடித்தார்கள் நம் தமிழர்கள்......
தொழில்நுட்பம்:
                    நாம் கடலில் நிற்கும் போது அலையடித்தால் நம் கால்கள் மணல் அரிப்பினால் மண்ணில் புதையும்.இந்த விந்தையைத் தான் நம் தமிழர்கள் சூத்திரமாகக் கொண்டார்கள்.காவிரி ஆற்றில் பெரும் பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.மண் அரிப்பினால் பாறைகள்  மூழ்கின.அவற்றின் மீது மீண்டும் பறைகளைப்போட்டு ஒரு களிமண்ணாலானா பசையால் ஒட்ட வைத்தனர்.கீழுள்ள பாறைகள் புதையப் புதைய தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன.இறுதியில் கீழுள்ள பாறைகள் கடின தளத்தை அடைந்தவுடன் பாறைகள் இறங்குவது நின்று போனது.இவற்றின் மீதே 1080 அடி நீளமும் 66 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட கல்லணை அமைந்துள்ளது.......
பெருமை:
            இன்று  சிமென்டால் கட்டப்படும்  அணைகளே 500 ஆண்டுகளில் பலமிழந்து போகின்றன.அவ்வாறு இருக்க கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஒரு அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அகிலம் போற்றும் அதிசயமே ஆகும்.சங்க காலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக்  கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியத்தை பட்டினப்பாலை,பொருநர் ஆற்றுப்படை பாடல்களும் தெலுக்குச் சோழக் கல்வெட்டுகளும் , திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.பெருமை  வாய்ந்த கரிகாலனுக்கு காவிரி கரையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது....

கல்லணையும் ஆங்கிலேயர்களும்:
                கி.பி.1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அணைக்கட்டி என கல்லணை குறிப்பிடப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பாசன வரலாற்ற்றில் தனக்கென ஒரு அழியா இடம் பிடித்த சார் ஆர்தர் காட்டன் இக்கல்லணைக்கு  மகத்தான அணை( GRAND ANAICUT) எனப் பெயர் வைத்தார்.அதுவே நிலைத்து விட்டது.

            கல்லாலும் களிமண்ணாலும் ஆன கல்லணை...காலம் கடந்து நின்று கரிகாலனின் பெருமையை பறைசாற்றுகிறது.. 

Tuesday, 14 August 2018

#கவிதை

#கவிதை
#மாயாவி


மொட்டவிழ்த்த மலர்களின்மேல்
பட்டுவிட்ட பனியின் துளிகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன் - என்
பால்யத்தை...

என் சருகுகளுக்கு ஜீவனூட்ட,
காற்றோடு கலந்துவிடாது
காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன் -
பனித்துளிகளுள் ஒன்றிரண்டை...

வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணம்பூசி
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்,
வாடிய பாரிஜாதங்களைச் சுற்றி -
என் வாசனையைத் தேடி...

மழைக்கால மண்வாசனையிடம்
தேம்பிக் கொண்டிருக்கிறேன் -
என் மழலை மணத்தை
கையோடு கூட்டிவரச் சொல்லி...

சக்கரங்களற்றுக் கிடக்கும்
நடைவண்டியையும்
வண்டி பொம்மைகளையும்
தடவிப் பார்க்கிறேன் -
என் அந்தக்கால அந்தரங்களை
அறியும் ஆவலில்...

வானவீதியில் கொட்டிக்கிடக்கும்
விண்மீன்களிடம்
விசாரித்துப் பார்க்கிறேன் -
என் கனவுகள்
விசித்திரமா விசாலமா என்று...

செல்லரித்துப் போன
பென்சில் சீவல்களிடத்தில்
பேசிக் கொண்டிருக்கிறேன் -
என் செல்லக் குறும்புகள் பற்றி...


திக்குக்கொன்றாய்க் கிடக்கும்
பல்பத் துண்டுகளுள்
என் வாய்பட்டதனால் முறிந்தவைகளைச்
சேகரித்துக் கொள்கிறேன்;
சிங்காரச் சிரிப்பொலிகளையும் தான்...

மந்தமாருதத்தினூடே சென்று
தேடிப் பார்க்கிறேன் -
நான் மறைத்து வைத்த
என் முதலிரண்டு பற்களை...

தூசி துடைத்துக்
குலுக்கிப் பார்க்கிறேன்,
களிமண் உண்டியலை -
பைசாவையும்
பாட்டியையும்
பண்டிகைகளையும்
பஞ்சுமிட்டாய்களையும்
பலூன்களையும்
நினைத்துக் கொண்டே...


புருவங்களோடு நின்றுவிட்ட
மழைத்துளிகளை
ஆராய்ந்து பார்க்கிறேன் -
என் சின்னக் கன்னங்களில் வழிந்தோடிய
கண்ணீர்த் துளிகளின்
தூய்மை கண்டறிய...

மாரிக்காலத்துத் தடாகங்களில் நிற்கும்
என் காகிதக் கப்பல்களை
அவ்வப்போது பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் -
தூரதேசம் சென்று
கோலோச்சும் ஆசையில்...

நான் தின்று தீர்த்த
மிட்டாய்களின் பெயர்களை
விரல்விட்டு எண்ணிப்பார்க்கிறேன்;
அவை பத்தைக் கடந்ததும்
எந்த விரல்கொண்டெண்ணுவது என
யோசித்துக் கொண்டே...

இன்றைக்கும்
பாதி வயிறு நிரம்பியவாறே
உறங்கச் செல்கிறேன் -
இன்றைக்காவது
வயிற்றைத் தடவிப் பார்க்க
கடவுள் வருவாரா என்று பார்க்க;
போலித் தூக்கம் தூங்கிக் கொண்டே...


கரைந்து கொண்டேயிருக்கும்
காலத்திடம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்
கண்ணீருடன் -
காணாமல்போன என்னைக்
கண்டுபிடித்துத் தருமாறு...

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...